சொந்த ஊர்க் குளத்தை தூர்வாரும் எஸ்.பி.பி.

செவ்வாய், 6 ஜூன் 2017 (12:53 IST)
தான் பிறந்த ஊரில் உள்ள கோயில் குளத்தைத் தூர்வார உதவி செய்வதாக பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார்.




எஸ்.பி.பி. என்று அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த ஊர், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோணேட்டம்பேட்டை. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தங்கள் மண்ணின் மைந்தனான எஸ்.பி.பி.யின் பிறந்தநாளை, எளிமையாகக் கொண்டாடியிருக்கிறது இந்த கிராமம். அதில், தன்னுடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் எஸ்.பி.பி.

“இந்த கிராமத்திற்கு நான் இதுவரை எதுவும் செய்தது இல்லை. ஆனால், இந்த கிராம மக்கள் என்மீது வைத்திருக்கும் பாசம் அளவில்லாதது. இனிமேல், இந்த கிராமத்திற்கு அடிக்கடி வந்து செல்வேன். இங்குள்ள மக்கள் என்னை எஸ்.பி.பி.யாகப் பார்க்காமல், கோணேட்டம்பேட்டை மணியாகப் பார்த்தால் சந்தோஷப்படுவேன். நான் பிறந்த இந்த கிராமத்திற்கு, ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன். இங்குள்ள துலக்காணத்தம்மன் கோயில் குளம் தூர்ந்துபோய் காணப்படுகிறது. அதைத் தூர்வார உதவி செய்வேன்” என்று அந்த விழாவில் பேசினார் எஸ்.பி.பி.

வெப்துனியாவைப் படிக்கவும்