நடிகர் விஜய் அப்படி செஞ்சா என்ன தப்பு? : ராதாரவி அதிரடி பேட்டி

திங்கள், 22 அக்டோபர் 2018 (13:48 IST)
நடிகர் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று பிரபல திரைப்பட நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன் சர்கார் படத்தில் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

 
சர்கார் படம் அரசியல்வாதிகள் குறித்த படம் என்பதால் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை விஜய் அரசியல் குறித்து பேசினார். சர்கார் படத்தில் தான் முதல்வராக நடிக்கவில்லை என்றும் நிஜத்தில் முதல்வராக இருந்தால் நடிக்க மாட்டேன் என்றும் நடிகர் விஜய் பேசியது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில், நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவது உறுதி என ராதாரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ராதாரவி அளித்த பேட்டியில் கூறியதாவது :
 
விஜய்யை அவருடைய முதல் படத்திலிருந்தே எனக்கு தெரியும்.  விஜய்யிடம் ஒரு சமூக அக்கறை இருக்கிறது. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். விஜய்யின் ஒவ்வொரு அணுகுமுறையும் நிதானமும் அப்படித்தான் நினைக்க வைக்குது. ஒருவேளை அவர் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் நன்மை செய்பவராக இருப்பார். அனிதா வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லுவதாக இருக்கட்டும், தூத்துக்குடிக்கு சென்று அங்கே ஆறுதல் சொன்னவிதமாகட்டும். எல்லாமே விஜய்யின் அரசியலைக் காட்டுகிறது.
 
சிலபேர், சர்கார் படத்துக்காக அதன் ப்ரமோஷனுக்காக விஜய் சொல்லும் ஸ்டண்ட் பேச்சு என்றும் சொல்லுகிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே. ஒரு படத்துக்குப் ப்ரமோஷன் தேவைதானே. அப்படிச் செய்யட்டுமே. அதனால் என்ன தப்பு.
 
இவ்வாறு நடிகர் ராதாரவி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்