10 மில்லியன் வியூஸா?... ஓடிடியில் சாதனை படைத்த ‘போத்தனூர் தபால் நிலையம்’ திரைப்படம்

திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (09:45 IST)
போத்தனூர் தபால் நிலையம் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் கடந்த மே மாதம் வெளியானது.

Passion Studios தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் ஆகியோரின்  தயாரிப்பில் உருவான ‘போத்தனூர் தபால் நிலையம்’ நேரடி ஓடிடி வெளியீடாக மே 27, 2022 முதல் ஆஹா தமிழில் வெளியானது. இப்படத்தை இயக்கியுள்ள பிரவீன் தான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படம் பற்றி பேசிய இயக்குனர் நடிகர் பிரவீன் “அஞ்சலகத்தில் காசாளராக இருந்த என் அப்பாவிடம் சாவகாசமாக பேசும் போதுதான் போத்தனூர் தபால் நிலையம் என்ற கதைக்கரு உருவானது. அவர் தனது அனுபவத்தை, சில நிஜ வாழ்க்கை சம்பவங்களுடன் பகிர்ந்து கொள்வார், அந்த பகிர்தல்கள் ஒரு கற்பனை நிறைந்த திரைப்படத்தை, உருவாக்க என்னைத் தூண்டியது. திரைக்கதையை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கியுள்ளோம், போத்தனூர் தாபல் நிலையம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய மற்றும் தனித்துவமான அனுபவமாக இருக்கும். இந்த படம் இந்தியாவின் முதல் தபால் அலுவலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். 90களின் பின்னணியில் இப்படம் அமைக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்களுக்கு ஒரு துல்லியமான காட்சி விருந்தளிக்க கலைத் துறையின் சார்பில் பல கலைஞர்கள் பணிபுரிந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தப் படம் ரெட்ரோ பாணியில் இருக்கும், 90களை மீண்டும் பார்க்கும் அனுபவமாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது ஓடிடியில் இந்த திரைப்படம் 10 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளதாக ஆஹா தமிழ் ஓடிடி அறிவித்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒரு லோ பட்ஜெட் இவ்வளவு அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து சாதனையாக பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்