பெண் சாதனை விருது வழங்கிய அமைப்பிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா

புதன், 15 மார்ச் 2017 (23:45 IST)
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வரும் ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சாதனை செய்த பெண்களுக்கு 'பெண் சாதனையாளர்' என்ற விருதை வழங்கி கெளரவித்து வருகிறது.


 


இதன்படி நேற்று ஐந்தாவது ஆண்டின் பெண் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்த அமைப்பின் நல்லெண்ண தூதர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹைனா, ரெயின்ட்ராப்ஸ் நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இந்த ஆண்டின் பெண் சாதனையாளர் விருதை பெறுபவர் நடிகை நயன்தாரா என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நயன்தாரா வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் நேரில் இந்த விருதை பெற முடியவில்லை. ஆனால் இதுகுறித்து நயன்தாரா வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

இந்த விருது பெற்றுக்கொண்டது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. உண்மையாக இந்த விருது நான் விருது வழங்கும் விழாவில் வந்து நேரடியாக பெற்றுக் கொள்ள விரும்பினேன். ஆனால் சென்னைக்கு வெளியில் படப்பிடிப்பு நடந்து வருவதால் என்னால் வரமுடியவில்லை.

நான் பெரும்பாலும் விழாக்களில் கலந்து கொள்வதில்லை. ஆனால், சமூக காரணங்களுக்காக இந்த விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பினேன். நான் வர முடியாததற்கு இதயப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்நிறுவனம் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். இவ்வாறு நடிகை நயன்தாரா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்