அப்துல் கலாம் மீண்டும் பிறந்திட கனவு காணுங்கள் - நடிகர் சங்கத்தின் புகழஞ்சலி

புதன், 29 ஜூலை 2015 (13:01 IST)
அப்துல்கலாமின் மறைவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் இரங்கல் செய்தி விடுத்துள்ளனர்.
 
இந்திய நாட்டு பெருமையை உலகுக்கு உணர்த்திய மாபெரும் மேதை அப்துல்கலாம் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். 2003-ம் ஆண்டில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நாங்கள் அனைவரும் எங்கள் சங்கத்தின் சார்பில் அவரை சந்திக்க சென்றபோது, எங்கள் அனைவருக்கும் விருந்தளித்து உபசரித்து, நல்ல அறிவுரைகளை வழங்கியதுடன், எங்கள் அனைவருடனும் சேர்ந்து புகைப்படம் எடுக்க அனுமதித்தது, வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். 
 
இந்திய மாணவர்கள், குழந்தைகள் ஆகிய வருங்கால சமுதாயம் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து தவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனி, யார்தான் இவர்களுக்கு வழிகாட்டுவது? கனவு காணுங்கள். கனவு காணுங்கள். அப்துல்கலாம் மீண்டும் பிறந்திட கனவு காணுங்கள். அதை இறைவன் நிறைவேற்றி தருவான். 
 
இவ்வாறு நடிகர் சங்க இரங்கல் செய்தியில் சரத்குமார், ராதாரவி கூறியிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்