“மாசாலா படங்களுக்கும் பம்மாத்து படங்களுக்கும் நடுவில்..” மாமனிதன் படத்தை உச்சிமுகர்ந்த மிஷ்கின்!

திங்கள், 27 ஜூன் 2022 (10:27 IST)
மாமனிதன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. இந்த படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக சொல்லப்பட்டது.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் வாங்கியுள்ளார். சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் மாற்றப்பட்டது. கடைசியாக ஜூன் 24 அம் தேதி ‘மாமனிதன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. 
இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் படம் பார்த்து பகிர்ந்துள்ள பதிவில் ““எல்லா சாமான்யர்களின் வாழ்விலும் விதி எனும் சூறாவளி அவ்வபோது வாழ்க்கையை உடைத்துப் போடுகிறது. மாமனிதன் என்ற கதையில் ராதாகிருஷ்ணன் என்ற சாமானியனின் வாழ்க்கை ஒரு கயவனால் உடைக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணன் ஓடுகிறான். வழியில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் அவனை மீண்டும் ஒரு மாமனிதனாக்குகின்றன.  அவன் “மாமனிதன்” ஆகின்றான். மிக எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு அன்பு சித்திரம். இந்த படம் என் சிந்தனைகளை மேம்படுத்துகிறது. என் வாழ்க்கையை அர்த்தப்பட வைக்கிறது. மசாலா படங்களுக்கும் பம்மாத்து படங்களுக்கும் நடுவே ஒரு மேன்மையான படத்தைத் தந்த சீனு ராமசாமிக்கு என் மனதின் ஆழத்தில் இருந்து நன்றிகள்.” என பாராட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்