பொக்கிஷ கனவு நிறைவேறிவிட்டது...நன்றி தலைவா : கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி

சனி, 24 பிப்ரவரி 2018 (11:51 IST)
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். 

 
ரஜினிகாந்த் தற்போது அரசியல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஒருபுறம், அடுத்த படத்திற்காக சில இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். அதில், தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லீ, அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஆகிய மூவரும் அடக்கம். 
 
இறுதியில் ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜே இயக்குகிறார் என நேற்று செய்தி வெளியானது.
 
ஜிகர்தண்டா படத்தை பார்த்த ரஜினி, பாபி சிம்ஹா வேடத்தில் நானே நடித்திருப்பேன் என கார்த்திக் சுப்புராஜியிடம் கூறியிருந்தார். அதன் பின்னரே, ரஜினிக்காக கார்த்திக் சுப்புராஜ் ஒரு கதையை தயார் செய்தார். அது ரஜினிக்கு பிடித்துப் போக, தற்போது அவரே இயக்குகிறார் என்பது தெரிய வந்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பது கூடுதல் தகவல்.
 
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் “என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. என்னுடைய பொக்கிஷ கனவு நிறைவேறியுள்ளது. நன்றி தலைவா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்