5 மீனவர்களுக்கு தூக்கு - மனித குலத்துக்கே விடுக்கப்பட்ட சவால் என கமல் கண்டனம்

சனி, 1 நவம்பர் 2014 (15:12 IST)
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. 2011 கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களைப் பிடித்து போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை அரசு பொய் வழக்குத் தொடர்ந்தது. அவர்கள் ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
இந்த சர்வாதிகார செயலை பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கண்டித்தன. சென்னையிலுள்ள இலங்கை தூதரகமும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.
 
இலங்கையின் இந்த சர்வாதிகார செயல் குறித்து தொலைக்காட்சி ஒன்று கமலிடம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன் இலங்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
 
இதைவிடக் கேவலம், மனித உரிமை மீறல் இருக்க முடியாது என்றவர் இலங்கையின் இந்த நடவடிக்கை மனிதாபிமானத்துக்கு மட்டுமின்றி மனிதகுலத்துக்கே விடுக்கப்பட்ட சவால் என்றார். மேலும், இந்திய அரசு உடனே அந்த ஐந்து மீனவர்களின் உயிரையும் காக்க வேண்டும். இல்லையெனில் இங்கே அரசு ஒன்று இருப்பதற்கான அர்த்தமே இல்லாமலாகிவிடும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்