ரசிகர்களிடம் சிக்கிய ஜூலியின் நிலைமை: தலை தெறித்து ஓடிய வீடியோ!

திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (12:08 IST)
ஜல்லிக்காட்டு போராட்டத்தில் கோஷம் போட்டு புகழ்பெற்ற ஜூலியான என்னும் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது தனித்துவமான அடையாளத்தை இழந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.


 
 
தொடக்கத்தில் இருந்த ஆதரவை தனது செயல்பாடுகள் மூலம் கெடுத்துக்கொண்ட ஜூலி, ஓவியாவுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து காயத்ரி கும்பலுடன் ஐக்கியமானது முதல் ஜூலியை வெளியேற்ற ரசிகர்கள் முடிவெடுத்துவிட்டனர்.
 
இதனையடுத்து ஜூலியை ரசிகர்கள் நேற்று வெளியேற்றிவிட்டனர். மேலும் ஓவியாவின் மன அழுத்தத்திற்கு ஜூலியும் ஒரு காரணம் என ரசிகர்கள் ஜூலி மீது பயங்கர கோபத்தில் இருந்தனர். மேலும் பரணி விஷயத்திலும் ஜூலி அப்படியே திடீரென பல்டி அடித்து மாறிவிட்டார்.


 
 
இந்நிலையில் தனது தவறை உணர்ந்த ஜூலி நேற்று பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் பரணியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பரணியை அண்ணன் என்று கூறிய நிலையில் அவர் வீட்டின் சுவர் ஏறி குதிக்கும்போது தடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு ஜூலியின் மனதில் இருந்ததாகவும், அவரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மன ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்ததால் அவர் பரணியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிகிறது.
 
நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மேட்ச் பார்க்க வந்த பரணியை தொடர்பு கொண்டு வெளியே வர வைத்து அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர் முகத்தை மூடிக்கொண்டு இருந்த ஜூலியை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 
 
ரசிகர்களிடம் சிக்கிய ஜூலியை இருச்சக்கர வாகனத்தில் பரணி போலீசார் உதவியுடன் அனுப்பி வைக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதன் பின்னர் அந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்காத ஜூலி இரு சக்கர வாகனத்தில் ஒருவரின் உதவியுடன் கிளம்பிவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்