க்யூபுக்குப் பதில் வேறொரு டெக்னாலஜி – தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

திங்கள், 22 மே 2017 (10:02 IST)
தியேட்டர்களில் படம் திரையிடப்படும் க்யூப் டெக்னாலஜிக்குப் பதில், வேறொரு டெக்னாலஜியை அறிமுகப்படுத்துகிறது  தயாரிப்பாளர்கள் சங்கம்.

 
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான தியேட்டர்களில், க்யூப் டெக்னாலஜி மூலம் படங்கள் திரையிடப்படுகின்றன. இதற்காக, ஒரு  படத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறது க்யூப். இடைவேளையில் டீஸர், டிரெய்லர், விளம்பரங்கள் என எதை  ஒளிபரப்பினாலும், அதற்கும் பணம் செலுத்த வேண்டும்.
 
தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இதுகுறித்து வெளியில் விசாரித்தபோது, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு  நிறுவனம் 5 ஆயிரம் ரூபாய்க்கு இந்த வேலையை நாங்கள் செய்து தருகிறோம் என்று சொன்னதாம். அதுவும், க்யூப் போலவே  2K, 4K, Barco, Sony எந்த ஃபார்மேட்டாக இருந்தாலும் 5 ஆயிரம் ரூபாய் தானாம்.
 
இந்த விஷயத்தைப் பற்றி க்யூப் நிறுவனத்திடம் சொன்னபோது, ‘நிர்வாகிகளாக இருக்கும் உங்களுக்கு வேண்டுமானால் அப்படித்  தருகிறோம். ஆனால், மற்றவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் தான்’ என்றார்களாம். இதனால் கடுப்பான நிர்வாகிகள், ஆகஸ்ட்  மாதம் முதல் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் டெக்னாலஜி மூலம் திரையிடப் போகிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்