“நான் ‘பாகுபலி’க்கு எதிராக பேசவே இல்லை” – பா.இரஞ்சித்

வெள்ளி, 5 மே 2017 (16:45 IST)
“நான் ‘பாகுபலி’ படத்துக்கு எதிராக எந்தக் கருத்தும் கூறவில்லை” எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

 
 
இந்திய சினிமாவையும் தாண்டி, உலக அளவில் சாதனை படைத்து வருகிறது ‘பாகுபலி-2’. அனைத்து இந்தியர்களும்,  குறிப்பாகத் தென்னிந்தியர்கள் அதன் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம், ஒருசில எதிர்ப்புக் குரல்களும் எழத்தான் செய்கின்றன. இயக்குநர்கள் ராம்கோபால் வர்மா, தங்கர்பச்சான் ஆகியோர் படத்தை விமர்சித்து தங்கள் கருத்துகளைத்  தெரிவித்திருந்தனர். 
 
அதேபோல், இயக்குநர் பா.இரஞ்சித்தும் படத்தை விமர்சித்ததாக தகவல் வெளியானது. ‘படத்தில் சமூகக் கருத்து எதுவும்  இல்லை’ என்று அவர் சொன்னதாக இணையதளங்களில் செய்தி வெளியானது. இதைக் கேள்விப்பட்ட அவர், தான் அப்படி  எதுவும் கூறவில்லை என மறுத்துள்ளார். அத்துடன், தான் படம் பார்த்துவிட்டதாகவும், தனக்கு ரொம்பப் பிடித்திருந்தது என்றும்  பா.இரஞ்சித் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்