சினிமா துறையை காப்பாற்ற வந்தவன் நான்: நடிகர் விஷால் கருத்து!

வியாழன், 16 மார்ச் 2017 (11:41 IST)
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடர்பாக ஆதரவு திரட்டுவதற்காக நடிகர் விஷால் கோவையில் செய்தியாளர்  சந்திப்பில், சினிமா துறையை காப்பாற்றவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக  எதுவுமே நடக்கவில்லை.
 
 
பட தயாரிப்பில் நடிகர்கள், இயக்குனர்களும் உள்ளனர். சில பட தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் வெளியிட முடியாத  நிலை உருவாகியுள்ளது. சில படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற 100 சதவீத வாய்ப்புகள் எங்களது அணிக்கு உள்ளது.
 
தயாரிப்பாளர் சங்க தேர்தல் சம்பந்தமாக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவை கேட்க உள்ளோம். தமிழக அரசியல் தொடர்பாக ஜனநாயக ரீதியிலான துணிச்சலான கருத்துகளை நடிகர் கமல்ஹாசன் கூறி வருவது வரவேற்கத்தக்கது. என விஷால் கூறினார்.
 
பின்னர், நடிகர் விஷாலும் மற்றவர்களும் தங்களது அணி சார்பில் போட்டியிடும் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டனர். அவருடன் இயக்குனர்கள் மிஷ்கின், எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் உதயா, நந்தா ஆகியோரும்  இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்