"தில் ராஜா" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

J.Durai

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (08:19 IST)
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில்,  இயக்குநர்.ஏ வெங்கடேஷ் இயக்கத்தில்,விஜய் சத்யா,ஷெரீன் நடிப்பில், அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள திரைப்படம்,
“தில் ராஜா”வருகின்ற 27- ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில்
இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியதாவது…...
 
அனைவரையும் இங்கு ஒன்றாகப் பார்ப்பது மிகப்பெரிய சந்தோசம் தருகிறது. தில் ராஜா படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை.படம் முடித்த பின்னர் புரமோசனுக்கு மாஸாகா பாடல் கேட்டார்கள். ஹுயூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள், ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள். ஏ வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கிறேன். விஜய் சார் ஃபேன் நான், அவரையும் அம்மாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார் அவருடன் படம் கிடைத்தது மகிழ்ச்சி. விஜய் சத்யா ஒரு நடிகனாக மக்களை மகிழ்விக்கக் கடுமையாக உழைக்கிறார். அவர் பல வலிகளுடன் தான் இங்கு இருக்கிறார். அவருக்கு இந்தப்படம் வெற்றியைத் தரட்டும். இனிமேல் நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்,  இந்தப்படம் நல்ல இடத்தைச் சென்றடைய வேண்டும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
 
நடிகை கனிகா மான் பேசியதாவது…...
 
எல்லோருக்கும் வணக்கம், இங்கு இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சி.  விஜய் சத்யாவுடன் அடுத்த படத்தில் நடிக்கிறேன்.  இந்தப்படம் பார்த்தேன் மிக அருமையாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  எல்லோருக்கும் நன்றி.
 
நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது…....
 
விஜய் சத்யாவிற்கும், ஏ வெங்கடேஷ் சாருக்கும், அம்ரீஷுக்கும் என் வாழ்த்துக்கள். அம்ரீஷை அதிகம் வெளியில் பார்த்ததில்லை, இப்போது தான் பார்க்கிறேன். எல்லாப் பாடல்களும் நன்றாக வந்துள்ளது வாழ்த்துக்கள். 10 வருடம் முன் எங்கப்பா உடன் சண்டையெல்லாம் நடந்த போது, மீண்டும் சினிமாவில் நடிக்க நினைத்த போது, ஏ வெங்கடேஷ் சார் தான் நடிக்க வைத்தார். இந்தப்படத்தில் நடிக்க என்னைத்தேடியபோது, நான் சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்லியிருக்கிறார்கள், ஏ வெங்கடேஷ் சார் கேட்ட போது, சார் என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம், என்றைக்கு என்று சொல்லுங்கள் நான் வருகிறேன் என போய் நடித்தேன். இப்போது நானும் இயக்குநராக மாறியிருக்கிறேன், ஒரு பெரிய படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். எனக்கு படம் செய்வதில் உள்ள கஷ்டம் தெரியும். விஜய் சத்யா இந்தப்படத்தை கஷ்டப்பட்டு எடுத்து, இங்கு கொண்டு வந்துள்ளார். செப்டம்பர் 27 ஆம் தேதி இப்படம் வருகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 
 
இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியதாவது…....
 
எல்லோருக்கும் நன்றி, இப்படத்தில் ஷெரீன், சம்யுக்தா இருவரும் நடித்தார்கள், ஆனால் பட விழாவிற்கு அழைத்தோம், வரவில்லை, சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னைக்கூட உங்கள் பட ஹீரோக்களை கூப்பிடுங்கள் என்றார்கள், நானும் ஒரு ஹீரோவை கூப்பிட்டேன் வரவில்லை. இது தான் சினிமா. விஜய் சத்யா ஒரு நாள் கூப்பிட்டு, கதை சொன்னார் என் கருத்தைக்களை சொன்னேன். சார் நீங்க தான் டைரக்ட் பண்ணனும் என்றார். என் ஸ்டைலில் இல்லையே எனத் தயங்கினேன் ஆனால் நீங்கள் தான் பரபரவென டைரக்ட் செய்வீர்கள் என்றார்.  மகிழ்ச்சியுடன் ஒகே சொன்னேன். எந்தப் பிரச்சனை வந்தாலும், அதை எதிர் கொள்ளும் ஹீரோ தான் ஒன்லைன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். ஷெரீனுக்கு முக்கியமான ரோல், சம்யுக்தாவிற்கும் முக்கியமான ரோல், இருவரும் வரவில்லை. வனிதா இந்தப்படத்தில் இருப்பது ஆடியன்ஸுக்கு தெரியக்கூடாதென நினைத்தேன்.  இன்று வேறு வழியில்லாமல் வரவைத்து விட்டேன். அவர் கதாப்பாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும். அம்ரீஷ் உடன் நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் பொறுமையாக மிக அழகாகப் பாடல்கள் தந்துள்ளார். விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். சத்யாவின் திறமைக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன். எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
 
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது….
 
இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். அம்ரீஷ் என் பிள்ளைகளில் ஒருவன், இன்னும் அவன் பெரிய ஆளாக வருவார்.  நாயகி ரெண்டு பேர் வரவில்லை, என்கிறார்கள் பேக்கப் பண்ணிய ஹீரோயினை ஏன் படத்தில் நடிக்க வைத்தீர்கள், இனிமேல் அந்த இரண்டு பேருக்கும் தமிழில் யாரும் வாய்ப்பு தரக்கூடாது. இதோ அடுத்த படத்தில் நடிக்கும் நடிகை வந்திருக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள். என் நண்பன் திருமலை மனக்கஷ்டத்தில் எல்லாவற்றையும் கொட்டி விட்டார். ஒரு தயாரிப்பாளருக்கு நன்றி மறந்தவனை நடிக்க வைக்காதீர்கள். இந்தப்படத்தில் அம்ரீஷ் அருமையான பாடல்கள் தந்துள்ளார். இயக்குநர் ஏ வெங்கடேஷ் 32 நாட்களில் படத்தை எடுத்து முடித்துள்ளார். பட டிரெய்லரே மிக அருமையாக உள்ளது. தில் ராஜா வெல்லும் ராஜாவாக இருக்கும். விஜய் சத்யா ஒரு ஆணழகன், தமிழ்மகன் நல்ல நடிகனாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.  இப்போது வரும் நடிகர்களுக்கு வரும் போதே எம் ஜி ஆர் ஆகிவிட வேண்டுமென ஆசை. ஆனால் அவர் பட்ட கஷ்டம் யாருக்கும் தெரியாது. சாப்பாட்டுக்காகக் கஷ்டப்பட்டவர். அவர், அதிலிருந்து உழைத்து வந்தவர். அவர் அருமை யாருக்கும் வராது. சத்யா நன்றாக உழைத்து, இன்னும் நல்ல படங்கள் செய், நல்ல நடிகனாக என் வாழ்த்துக்கள் என்றார்.
 
நடிகர் விஜய் சத்யா பேசியதாவது…....
 
எல்லோரும் எங்களை மதித்து என் விழாவிற்கு வந்துள்ளீர்கள், நன்றி. இயக்குநர் வெங்கடேஷ் சார்  சூப்பராக இந்தப்படத்தை இயக்கியுள்ளார். எல்லோரும் ரசித்து ரசித்து வேலை செய்து இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தந்து வெற்றி பெறச்செய்யுமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்