ஆபாசமான அவதூறு பரப்பும் காந்தராஜ், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை வேண்டும்- அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் வலியுறுத்தல்!

J.Durai

புதன், 18 செப்டம்பர் 2024 (09:59 IST)
சமீப காலமாக சமூக வலைதளங்களில் பெண் திரைப்பட கலைஞர்கள் மீது காந்தராஜ்  என்பவரும், பயில்வான் ரங்கநாதன் என்பவரும் தொடர்ச்சியாக யூடியூப் சேனல்களில் அருவருக்கதக்க, ஆபாசமாக, பெண் திரைப்பட கலைஞர்கள் குறித்து பாலியல் ரீதியான அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
 
பெண் திரைப்படக் கலைஞர்கள் வாய்ப்புக்காக பாலியல் சமரசங்களை செய்து கொள்கிறார்கள் என்றும், பாலியல் சமரசம் செய்தே ஆடம்பர வசதியான, வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும், பெண் திரைப்படக் கலைஞர்களை கண்ணிய குறைவாகவும், மரியாதை குறைவாகவும் திரைப்படத் துறையில் பணியாற்றும் பெண்களுடைய உழைப்பை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பி வருகின்றனர்.
 
அனைத்து துறைகளிலும் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து முன்னேறி வருகின்றனர். அதுபோலவே திரைப்படத் துறையிலும் பணி சூழல் காரணமான கடும்  இன்னல்களை எல்லாம் தாண்டி எந்தவித நேர கட்டுப்பாடும் இல்லாமல் உழைத்து வருகின்றனர். திரைப்படத்தில் நடிப்பது என்பது தொழில் என கருதாமல் ஆடம்பரமான வாழ்க்கைகாக என பெண் கலைஞர்களை மட்டுமே குறிவைத்து ஆணாதிக்க சிந்தனையின் உச்சபட்ச கருத்துகளை சமூகத்தின் பொது புத்தியில் திணிக்க கூடிய  இத்தகைய செயலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 
 
மேலும் இத்தகைய அவதூறு பிரச்சாரங்களை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். 
 
பெண் திரைப்பட கலைஞர்களின் பாதுகாப்பிற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உறுதுணையாக நிற்கும். 
தென்னிந்திய நடிகர் சங்கம் உள் புகார் கமிட்டி குறித்து  திரைப்பட கலைஞர்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்திட வேண்டும். 
 
தமிழக மகளிர் ஆணையமும் மேற்கண்ட சம்பவத்தில் தலையீடு செய்து விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
 
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்