”பாடல் மூலம் கோடிகளில் சம்பாதிக்க தெரியும், ஆனால் அவருக்கு ராயல்டி தர வலிக்குமா?” அதிரடியில் இளையராஜா தரப்பு!!

திங்கள், 20 மார்ச் 2017 (11:43 IST)
இனி பாடகர்கள் இளையராஜாவின் பாடல்களைப் பாட அனுமதி பெற வேண்டும், ராயல்டி தர வேண்டும் என்று இளையராஜவின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


 
 
இது தற்போது பரபரப்பான விவாதமாகி உள்ளது. இது குறித்து இளையராஜாவின் காப்பிரைட் ஆலோசகர் பிரதீப் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, பாடகர்கள் பல நிகழ்ச்சிகளில் பாடி வருவாயைக் குவிக்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளர்களுக்கு இதில் எந்த லாபமும் வருவதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், இளையராஜா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், இனி மேடைகளில் தனது பாடல்களைப் பாட முறையான அனுமதி பெற வேண்டும், ராயல்டி தரவேண்டும் என்று தெளிவாக கூறினார். 
 
35 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் பாடல்கள், இசையை உருவாக்கிய ஒரு மேதைக்கு உரிய காப்புரிமைத் தொகையை தராமல் இதனை விமர்சனம் செய்வது தவறில்லையா, ஏழை ஆர்க்கெஸ்ட்ராக்களை தனது பாடல்களை பாட இலவசமாகவே அனுமதி கொடுத்துள்ளார். 
 
எஸ்.பி.பி. சார் இலவசமாக கச்சேரி நடத்தவில்லை. இந்த கச்சேரிகள் மூலம் பல கோடி ரூபாயை சம்பாதிக்கிறார்கள். ஆனால் பாடல்களை உருவாக்கிய இசையமைப்பாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தருவதில்லை. 
 
இளையராஜாவின் இசை பாடல்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், அவருக்கு சட்டப்படி சேர வேண்டிய ராயல்டியைத் தர மறுப்பது ஏன் என்று புரியவில்லை என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்