'தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று கமல்ஹாசன் கூறியதை அடுத்து, கன்னட அமைப்புகள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெங்களூரில் வைக்கப்பட்டிருந்த 'தக்லைஃப் படத்தின் பேனர்களை கிழித்து, கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பின் நிர்வாகிகள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மே 25ஆம் தேதி சென்னையில் நடந்த 'தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிவராஜ்குமார் குறித்து பேசிய கமல்ஹாசன்: "தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது போல, எங்கள் குடும்பத்தில் ஒருவராக கன்னடம் மொழி பேசுபவராக இருந்தாலும், சிவராஜ்குமார் இருக்கிறார்" என்று கூறினார். இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழிலிருந்து கன்னடம் பிறக்கவில்லை என்றும், தமிழும் கன்னடமும் சகோதர மொழிகள் என்றும் கன்னட அமைப்பினர் கூறி வருகின்றனர். கன்னடத்தை இழிவுபடுத்துவதாக கமல் மீது குற்றச்சாட்டு கூறும் அவர்கள், 'தக்லைஃப் படத்தை கர்நாடகத்தில் வெளியிட விட மாட்டோம் என்று போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.