சென்னை மாநகரின் பட்டினப்பாக்கம் பகுதியிலுள்ள முக்கிய சாலையான டிமான்டி சாலைக்கு, மறைந்த பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் இன்று காலை 10 மணியளவில், மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமித்த குரலில் நிறைவேற்றப்பட்டன. அதில், இசை உலகின் ஜாம்பவானான எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, டிமான்டி சாலைக்கு அவரது பெயர் சூட்டும் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது. அதேபோல், கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள வாடல்ஸ் சாலைக்கு 'எஸ்றா சற்குணம் சாலை' என பெயர் மாற்றம் செய்யவும் சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ் திரையுலகில் 'மெல்லிசை மன்னர்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்.பிலிம்பேர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி விருது உட்பட பல உயரிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.