சென்னை ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவிற்கு இயக்குனர் சிகரம் "கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு" என பெயர் வைக்கிறது தமிழக அரசு!

J.Durai

புதன், 10 ஜூலை 2024 (10:29 IST)
இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் நிறுவப்பட்டிருக்கும் கே.பாலசந்தர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை சூட்டி, கேக் வெட்டி கொண்டாடினார்கள். இவ்விழாவில் பாரதிராஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்க பொதுச்செயலாளர் வீ.பாபு, இயக்குனர்கள் வஸந்த், சரண், மங்கை அரிராஜன், நடிகர்கள் பூ விலங்கு மோகன், தாசரதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
 
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், சிரஞ்சீவி, மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்கள், நடிகைகள், திரையுலக பிரபலங்களின் கடிதத்தோடு, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்ந்த பகுதியில், 'கே.பாலசந்தர் சாலை' என பெயர் சூட்டவும், அவரின் திருவுருவ சிலை வைக்கவும் கோரிக்கையை, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிதாலயா வீ.பாபு கொடுத்த கடிதம் தற்போது தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து, பெருநகர சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலர் ஆணையரின் கருத்துரு அரசால் கவனமாக விரிவான ஆய்வுக்கு பின், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9, பகுதி-25, கோட்டம் 123-ல் உள்ள லஸ் சர்ச் சாலையில் காவேரி மருத்துவமனை அருகே, சுமார் 1000 சதுர அடி அளவில் அமையப் பெற்றுள்ள போக்குவரத்து தீவு என்று அமைந்துள்ள இடத்தினை, இயக்குநர் சிகரம் "கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு" என்று பெயர் மாற்றம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர் அவர்களுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
 
மேலும், கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என்ற பெயரை சாலையில் நிறுவுவதற்கு  கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவரும், நடிகருமான ராஜேஷ் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான பூச்சி எஸ்.முருகன், ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான கவிதாலயா வீ.பாபு ஆகியோர்கள் முயற்சியில் கே பாலச்சந்தர் சாலை இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்