ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும்-'புஜ்ஜி' திரைப்பட நடிகர் வரதராஜன் பழனிச்சாமி!

J.Durai

சனி, 15 ஜூன் 2024 (10:13 IST)
அண்மையில் வெளியான 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' திரைப்படம்  ஆட்டுக்குட்டிக்கும் குழந்தைகளுக்குமான அன்பைச் சொன்ன படம்.
 
இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப்  பெற்றது இந்த படத்தில்  கசாப்புக் கடைக்காரர் ரஹீம் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் வரதராஜன் பழனிச்சாமி படம் பார்த்தவர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
 
இது குறித்து பேசிய நடிகர் வரதராஜன் பழனிச்சாமி....
 
ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது தனது கனவு, லட்சியம், நோக்கம் 
நடிப்பு என்பது எனது பால்ய காலத்தில் இருந்து உடன் வருகிற ஒன்று என்பேன். 
 
நான் பள்ளி நாடகங்களில் நடித்து நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன். தொடர்ந்து  மேடை நாடக அனுபவங்கள் கல்லூரி மற்றும்  கோயில் திருவிழாக்களில் நண்பர்களுடன் இணைந்து அரங்கேற்றிய  நிறைய நாடகங்கள் எனது திறமையை வளர்த்துக் கொள்ள உதவியது.  அதில் குறிப்பாகப் பெண் வேடமிட்டு நடிக்கும்போது எனக்கு மிகவும் நல்ல பெயர் கிடைக்கும்.  அது மட்டுமல்ல தமிழ்நாடு அரசின் சார்பாக மாவட்டம் தோறும் நிகழ்த்திய மது விலக்கு, சேமிப்பு, சுகாதாரம் போன்ற  விழிப்புணர்வு  பிரச்சார  நாடகங்கள் என்னைப் பட்டை தீட்டி கொள்ள அற்புதமான சாதனமாக இருந்தது மட்டுமன்றி  என்  மக்களுக்கு நல்லதாக பல விசயங்கள் கற்றுத் தருகிறோம் என்னும் ஆத்மா திருப்தியும் தந்தன. .இதற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன் அப்போதெல்லாம் என் நடிப்பைப் பார்த்து விட்டுப் பலரும் பாராட்டும் போது நாம் தேர்ந்தெடுத்த நடிப்பு என்னும் பாதையில் சரியாகத்தான் பயணிக்கிறோம் என்கிற ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்கும்.ஏனென்றால் பல மாவட்டங்கள் பல தரப்பட்ட ரசனை கொண்ட நாடக ரசிகர்கள் என்று எல்லோரையும் கவர என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ளும் களமாக அதனைப் பயன்படுத்திக் கொண்டேன். அந்த அனுபவம் பல இடங்களில் எனக்கு கை கொடுத்தது
மேலும் திரைப்பட வாய்ப்பு தேடி கனவு லோகமான சென்னைக்கு பயணப்பட துணிவும் தன்னம்பிக்கையும் கொடுத்தது.  
 
எல்லோரையும் போல ஆரம்ப கால சிரமங்கள் எனக்கும் இருந்தாலும்  எனக்கு சினிமாவின் மீது ஆர்வமும் காதலும்தீரவில்லை. விடா முயற்சியின் பலனாக பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்கள் , விஜய் டிவி சீரியல் என்று வளர்ந்து வரும் நிலையில் பல சூழ்நிலைகள்  எனக்கும் எனது சினிமா காதலிக்கும் இடையே BREAK-UP   ஏற்பட காரணமானது. 
 
எனவே சொந்த ஊர் திரும்பி விட்டேன்.ஒரு கலைஞனின் நேசிப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கலைஞன் விலகி சென்றாலும் அந்த கலை அவனை தேடி அழைக்கும் என்று கூறுவார்கள். எனது வாழ்க்கையில் அந்த வாக்கு பலித்தது.  
பல ஆண்டுகளுக்குப் பிறகு...
எனது  நண்பர்- புஜ்ஜி அட் அனுப்பட்டி படத்தின் 
இயக்குநர் ராம் கந்தசாமி அவர்கள்  படம் பண்ணுவதாக இருக்கும்போது என்னிடம் என்ன கேரக்டர் செய்கிறீர்கள் என்றார். 
 
எது கொடுத்தாலும் சரி என்றேன்.  இயக்குனர் ராம் கந்தசாமியும்  எனது மற்றொரு நண்பரும் நல்ல விமரிசகருமான இணை இயக்குநர் மகேந்திரன் மற்றும்  இயக்குநர் ராம் கந்தசாமியும் கலந்து பேசி எனக்கு  கசாப்புக் கடை 
வைத்திருக்கும் ரஹீம் பாய் கேரக்டர்.  தரலாம் என்று முடிவு செய்ததை நான் அறிந்து கொண்டேன்.
புஜ்ஜி படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் ஆட்களைத் தேர்வு ஆடிசன்  வைத்தபோது  நான் படத்தில் தோன்றுவது போன்றே  முழு கெட்டப்பில் போய் நின்றேன். அந்தப் பாத்திரமாக மாறி அதே தோற்றத்தில் போய் நின்றதை இயக்குனர் மிகவும் பாராட்டினார். .அது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அப்படித்தான் புஜ்ஜி படத்திற்குள் வந்தேன்.
 
பத்திரிகையாளர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டிய போது,படத்தைப் பார்த்தவர்கள் பலரும் படத்தைப் பாராட்டியதைப்  போலவே .மிகவும் இயல்பாக  இருந்தது என்று  பாராட்டி வாழ்த்தினார்கள். 
இதை நான் எதிர்பார்க்கவில்லை .நடிக்கும் எந்த பாத்திரமாக  இருந்தாலும் நாம் செய்வதைச் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் எனக்குள் இருக்கும். அப்படியே நான் அதில் செய்தேன்.
 
ஊடகங்கள் குறிப்பாக என் பாத்திரத்தையும் என்னையும் பெயர்  குறிப்பிட்டுப் பாராட்டி இருந்தது எனக்குள் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.படம் பார்த்துவிட்டு ஒரு புதிய இயக்குநர் தனது படத்தில் கூட நல்ல  வாய்ப்பு தருவதாகக் கூறியிருக்கிறார். இவையெல்லாம்  எனது நீண்ட கலைப் பயணத்தில் சாலையோர விளக்குகளாக நின்று  எனக்குள் நம்பிக்கை வெளிச்சம் தருபவை ஆகும்.
 
வில்லாதி வில்லன் M.N நம்பியார் எனக்கு வில்லன் நடிகர்களில் எனக்கு மிகவும்  பிடிக்கும். 
 
அவருடைய காலகட்டத்தில்   வில்லனாகக் கொடிகட்டிப் பறந்தார்அல்லவா...   அவரது இடம் இன்னும் கூட  காலியாகத்தான் இருக்கிறது என்.எனக்கு அந்த இடத்தை நோக்கி செல்ல ஆசை. வில்லனாகவும் நடிப்பேன்.
அதே நேரம் எந்தப் பாத்திரம் இருந்தாலும் ஏற்று நடிக்கவும் எனக்கு ஆசை உண்டு.
 
எனக்குப் பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் . அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று கனவு உள்ளது.வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். வில்லனாக நடிக்கும் போது நம் எல்லையைத் தாண்டிப் புகுந்து விளையாட நடிப்பு வாய்ப்புகள் உண்டு என்று நினைக்கிறேன் என்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்