நடிகை பாவனா கடத்தல்; ரூ.30 லட்சம் பேரம்; தொடர்பில் 6 சினிமா பிரபலங்கள்!

திங்கள், 20 பிப்ரவரி 2017 (13:21 IST)
கேரளாவை சேர்ந்த நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மலையாள நடிகை பாவனா தமிழில் வெயில், தீபாவளி, ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார். அதன்பின் சரியான வாய்ப்பில்லாமல் அவர் மலையாளப் படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

 
இந்நிலையில் நடிகை பாவனா கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு வந்தபோது அவரை 3  பேர் காரில் கடத்தி 2 மணிநேரமாக மானபங்கப்படுத்தினர். பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி அதனை  வீடியோவாகவும் எடுத்தனர். பின்னர் காரை வழியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான பாவனாவின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனி இன்னும் கைது  செய்யப்படவில்லை.
 
சுனில் சினிமா பிரபலங்களுக்கு கார் டிரைவர்கள் ஏற்பாடு செய்து கொடுப்பவர். இவர் மீது கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு  வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. எனவே அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது  இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
 
கேரள போலீசார் இருவரையும் கைது செய்தனர். வாக்குமூலத்தில் நடிகை பாவனாவை கடத்தினால் தங்களுக்கு ரூ.30 லட்சம்  பணம் தருவதாக பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் சுனில் தெரிவித்தார். ஆனால் சுனில் கூறியபடி பணம் தராமல்  தலைமறைவாகி விட்டார். இதனால் தப்பிக்க நாங்களும் தலை மறைவானோம் என்றனர்.
 
இதையடுத்து குற்றவாளிகளின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் இதில் மலையாள திரையுலகை சேர்ந்த முக்கிய  பிரமுகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் 6 பேரின் எண்களும் இருந்தன. இவர்கள் எதற்காக சம்பவ நாளில் குற்றவாளிகளை  தொடர்பு கொண்டு பேசினர். பாவனாவை பழிவாங்கும் நோக்கில் அவரை கடத்தச் சொன்னார்களா? என்பது பற்றி போலீசார்  விசாரித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்