அரசியல் உள்பட எந்த வியாதியும் எனக்கு இல்லை: வதந்திக்கு விளக்கம் அளித்த எஸ்வி சேகர்..!

Siva

செவ்வாய், 15 அக்டோபர் 2024 (07:17 IST)
நடிகர் எஸ்வி சேகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு பதிலளித்து, அவர் ஒரு வீடியோவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், தனது உடல்நிலை குறித்த வதந்திகள் முற்றிலும் தவறானவை என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக எஸ்வி சேகர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அவசர சிகிச்சையில் உள்ளார் என்று இணையத்தில் செய்திகள் பரவின. இதனால், பலரும் அவர் விரைவில் நலமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்ததோடு, சிலர் பிரார்த்தனைகளையும் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், எஸ்வி சேகர், தன்னைப் பற்றி பரவிய தவறான தகவல்களை விளக்கமாக கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் இரண்டு நாட்களுக்கு முன்பு வெர்டிகோ பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாக வதந்திகள் உலாவி வருகின்றன. என்னை நினைத்து பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று பலர் பதிவுகள் செய்கின்றனர். உண்மையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அந்த பிரச்சனையை மருத்துவர்கள் ஒரே நாளில் குணமாக்கி விட்டார்கள்.

மேலும், என் பெயரில் போலியான ஐடி உருவாக்கி, இத்தகைய பொய்யான செய்திகளை பரப்புகின்றனர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நான் இப்போது முழுமையாக நலமாக உள்ளேன். அரசியல் அல்லது பிற நோய்களால் பாதிக்கப்படவில்லை.

கடந்த மாதம் எனக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்தது, அதை மருத்துவர்கள் சில நாட்களில் குணமாக்கி விட்டார்கள். நேற்று 'காதுல போ' நாடகத்தை மேடையில் நடத்தினேன். . எனது உடல் நலம் குறித்து நான் கூற விரும்புவது என்னவெனில், நான் நலமாக உள்ளேன், கடவுளின் அருளால் நன்றாக இருக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.



Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்