25 ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் இயக்கத்தில் நடிக்க இருந்த ‘காதல் ஒழிக’.. பார்த்திபன் பகிர்ந்த மலரும் நினைவுகள்!

vinoth

வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (12:15 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் கடந்த 2023 ஆம் ஆண்டு இரவின் நிழல் என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டாக எடுத்து வெளியிட்டார். அந்த படம் அந்த சிறப்பம்சத்தோடு வெளியானாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் இயக்கியுள்ள டீன்ஸ் என்ற படம்  சென்ற ஆண்டு வெளியானது. அதுவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதையடுத்து தன்னுடைய அடுத்த படமான ’54 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற திரைப்படத்தை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தான் நடிக்க இருந்து கைவிடப்பட்ட ‘காதல் ஒழிக’ படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில் “காதல் ஒழிக ‘
இன்றைய அரசியலில் தவிர்க்க இயலா கர்ஜனை
நண்பர் சீமான் அவர்கள் இயக்க நான் நடிப்பதற்காக கால் நூற்றாண்டுக்கு முன் இதே நாளில் வைக்கப்பட்ட தலைப்பு.படம் கை விடபட்டாலும் நட்பு அப்படியே ஒருவரை ஒருவர் ரசித்தபடி தொடர்கிறது. என் சில கவிதைகளை அவர் சிலாகித்து மேடையில் பாராட்டும் போது அந்தக் கவிதைகளில் உள்ள கருத்து விதைகளில் சில புதூ தளிர்கள் துளிர்க்கச் செய்கிறது. நானும் ஒரு ஒலி வாங்கிப் போல் அவர் பேச்சை மிக அருகில் இருந்து ரசிப்பேன் .இருவரின் அரசியலும் தத்துவமும் கருத்தும் விருப்பமும் வெவ்வேறாக இருப்பினும்,

‘கடவுள் இல்லை’ - பெரியார்
‘பெரியாரே இல்லை’ - சீமான்
அவரவரது குரலை உரக்க ஒலிக்கச் செய்வதாகவே நான் பார்க்கிறேன். நானும் அப்படியே எனக்கு சரியெனப் பட்டதை பட்டவர்த்தனமாக பேசுகிறேன். (அரசியல் +இன்ன பிற லாப நோக்கின்றி)
புரிந்தோர் பிஸ்தாக்கள்
புரியாதோர் பிஸ்கோத்துகள்!
சரி காதலுக்கு வருவோம் !
வருவதும் போவதும் வாடிக்கையே காதலுக்கு.
வருவதெல்லாம் போவதும் வாடிக்கையே சாதலுக்கு!
என்றோ மிடித்துப்போனது இன்று பிடிக்காமல் போய் சீமான் சுவரில் பெரியார் புகைப்படம் போல தான் இந்தப் பாழாய் போன காதலும் .
‘ என் இதயத்தில் அவள் அடித்து விட்டுச் சென்ற ஆணியில் கூட அவள் புகைப்படத்தைதான் மாட்டி விட்டிருக்கிறேன்’ என என் நண்பர் ஒருவர் எழுதியதைப் போல….
போன வருடம்
போன காதல்
வேறு பூமியில்
வேர் பிடித்துப் பூத்துக் குலுங்கும் .-அது
புரியாத-இன்னும்
பிரியாத -உயிர்வரை
பிரிந்திடாத ஒரு
காதலை
‘காதல் ஒழிக’ என
இக் காதலர் தினத்தில்
கொண்டாடும்!- புதிதாய்
பூத்தவர்கள்
பூத்தரேக்குலு (pootharekhulu ) சுவைத்து
கொண்டாட்டும்,
தோத்தவர்கள்
காத்திருங்கள்…………………..
அவளை/அவனை
சுமந்து கர்ப்பமான இதயத்தில்
கன்றாவி கவிதையாவது பிறக்கலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா காதல் உய்க்கும் - பின்
பொய்க்கும்.” எனக்  கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்