வணங்காமுடியில் போலீஸாக நடிக்கும் அரவிந்த்சாமி

சனி, 31 மே 2014 (10:44 IST)
இயக்குனர் செல்வாவின் வணங்காமுடியில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.
கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அரவிந்த்சாமி Kaksparsh என்ற மராத்தி படத்தின் தமிழ், இந்தி ரீமேக்கில் நடித்து வந்தார். 

அந்தப் படம் முடிவடைந்த நிலையில் அஜீத் - கௌதம் இணையும் புதுப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிப்பதாக செய்தி வெளியானது. நான்சென்ஸ் என்று அந்தச் செய்தியை அரவிந்த்சாமி மறுத்தார். எதுவாக இருப்பினும் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இயக்குனர் செல்வாவின் புதிய படம் வணங்காமுடியில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதில் அரவிந்த்சாமிக்கு நேர்மையான போலீஸ் அதிகாரி வேடம். செல்வா சொன்ன கதையும், ஹீரோ கதாபாத்திரமும் பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கு முன் செல்வாவின் இயக்கத்தில் புதையல் படத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆகஸ்ட் மாதம் வணங்காமுடியின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்