மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி - ரகசியத்தை உடைத்த ஜென்டில்மேன்

வெள்ளி, 30 மே 2014 (12:28 IST)
இனிமேல் நான் படம் நடிக்க வேண்டுமா வேண்டாமா என்று சந்திரமுகி காலத்திலேயே சந்தேகம் தெரிவித்தார் ரஜினி. ஆனால் அதற்குப் பிறகுதான் சிவாஜி, எந்திரன் இப்போது கோச்சடையான் என்று அவரின் பிளாக்பஸ்டர் படங்கள் வெளியாயின. உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் ரஜினி ஓய்வை நாடுவார் அல்லது குறைந்தது இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் படங்களில் நடிப்பார் என கவலையுடன் கணக்குப் போட்ட அவரது ரசிகர்களுக்கு ஃபுல்மீல்ஸ் விருந்து வைக்க ரஜினி தயாராகி வருகிறார்.
கோச்சடையான் வெளியாகி வெற்றிகரமாக தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் லிங்கா படத்தில் பிஸியாக இருக்கிறார் ரஜினி. கடந்த இரண்டாம் தேதி தொடங்கிய இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. மைசூர் அரண்மனையில் அரசரின் பிரத்யேக தங்கத்திலான அறையில் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் படத்தை எடுக்கிற வேகத்தைப் பார்த்தால் படம் இந்த ஆண்டே திரைக்கு வருமத் வாய்ப்புள்ளது. 
லிங்கா முடிந்ததும் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருப்பதாக பேசப்படுகிறது. இந்தப் பேச்சுக்கு பிள்ளையார்சுழி போட்டவர் ஜென்டில்மேன் கே.டி.குஞ்சுமோன். ரஜினியுடனான தனது பழையகால நட்பை சமீபத்தில் பகிர்ந்திருந்தார் குஞ்சுமோன். அதில், தனது ஜென்டில்மேன் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று பிரமாண்ட இயக்குனராக வளர்ந்து நிற்கும் ஷங்கருடன் ரஜினி மீண்டும் இணைந்து படம் செய்யவிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் என்று கூறியிருந்தார். அவர் மூலமாகதான் ரஜினி - ஷங்கர் மீண்டும் இணையவிருக்கும் தகவல் வெளியுலகுக்கு தெரிய வந்தது.
 
ரஜினியின் இந்த சுறுசுறுப்பு அவரது ரசிகர்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்