300க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் காந்தா ராவ் காலமானார்.
தமிழில் பெரும் வரவேற்புடன் நீ்ண்ட காலம் ஓடிய லவகுசா திரைப்படத்தில் லட்சுமணன் வேடம் தாங்கி நடித்து புகழ் பெற்றவர் காந்தா ராவ். அதற்காக தேச விருது பெற்றவர்.
100க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்த காந்தா ராவ், 16.11.1923ஆம் ஆண்டு நல்கொண்டா மாவட்டம் கோதாடா கிராமத்தில் பிறந்தார். தாடேபள்ளி லக்ஷ்மி காந்தா ராவ் என்ற இயற்பெயர் கொண்ட காந்தா ராவ், இளம் வயதிலேயே சென்னை வந்தவர். 1951ஆம் ஆண்டு தனது 28வது வயதில் நிக்தோஷி என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு நாயகனாகவும், குணசித்திர நடிகராவும் பல படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் சொல்லாடல் சேர்க்கப்பட்ட பல மாயா ஜால படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பெயர் பெற்றவர் காந்தா ராவ். மதுரை மன்னன், மாய மோதிரம் ஆகியன அப்படிப் புகழ்பெற்றப் படங்களாகும். கடைசியாக ஐ.வி. சசி இயக்கிய காளி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் 1980ஆம் ஆண்டு வெளிவந்தது.
85 வயதான காந்தா ராவிற்கு புற்றுநோய் பீடித்தது. சமீபத்தில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவர் ஹைதராபாத்திலுள்ள யசோதா என்ற தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.