ஜெய், நஸ்ரியா படத்துக்கு தடை - ஆரம்பிச்சிட்டாங்க வேலையை

வியாழன், 29 மே 2014 (18:44 IST)
மத சம்பந்தப்பட்ட எதையும் சினிமாவில் அனுமதிப்பதில்லை என்று மத அமைப்புகள் முடிவெடுத்தால் என்ன செய்வது? ஜெய், நஸ்ரியா நடித்திருக்கும் திருமணம் எனும் நிக்காஹ் படத்துக்கு தடை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஷியா முஸ்லீம் ஜமாத்தின் துணைத் தலைவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவிலுள்ள விவரம் வருமாறு.
 
நடிகர் ஜெய், நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இந்த படம் நாளை (30ஆ‌ம் தேதி) வெளியாக உள்ளது. இந்த படத்தின் ஷியா முஸ்லிம் சமுதாயத்தின் மதக் கொள்கை தவறாகவும் அவதூறாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவந்தால், மத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 

ஏற்கனவே தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் வேலாயுதம் என்ற படத்தில் மன உணர்வுகளை புணப்படுத்தும் விதமாக காட்சிகளை எடுத்திருந்தார். தற்போது திருமணம் என்னும் நிக்காஹ் படத்திலும் முஸ்லிம் சமுதாயத்தை விமர்சனம் செய்துள்ளார்.
 
எனவே ரவிச்சந்திரன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20ஆ‌‌ம் தேதி புகார் செய்தோம். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை 30ஆ‌ம் தேதி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்திரவிடவேண்டும்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இரண்டு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி ரவிச்சந்திரன், போலீஸ் கமிஷனர், சென்சார் மண்டல அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்