கோடை வெயிலிலும் அவர் கேரவன் கேட்கலை - நடிகையை புகழும் இயக்குனர்

செவ்வாய், 17 ஜூன் 2014 (12:43 IST)
கோடையின் கத்திரி வெயிலிலும் எனக்கு கேரவன் வேண்டும் என்று அடம்பிடிக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என நடிகை சரண்யா மோகனை புகழ்ந்தார் இயக்குனரும் தயாரிப்பாளருமான செல்வபாரதி. 
 
விஜய்யை வைத்து ப்ரியமானவளே, நினைத்தேன் வந்தாய், வசீகரா போன்ற படங்களை இயக்கியவர் செல்வபாரதி. தற்போது காதலைத்தவிர வேறொன்றுமில்லை என்ற படத்தை அவர் தயாரித்து இயக்கி வருகிறார்.
 
செல்வபாரதியே தயாரிப்பு என்பதால் சிக்கனமாக படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தில் சரண்யா மோகன் ஹீரோயினாகவும், சாட்டையில் நடித்த யுவன் ஹீரோவாகவும் நடித்துள்ளனர்.
 
இப்போதெல்லாம் ஹீரோயினுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நடிகைகளே படப்பிடிப்புதளத்தில் தனி கேரவன் கேட்கிறார்கள். ஹைடெக் கேரவன் இல்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு வெளியேறும் நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால் சரண்யா மோகன் இந்த கத்திரி வெயிலிலும் கேரவன் கேட்கவில்லையாம். படப்பிடிப்பு இடைவேளையில் உதவியாளர் குடை பிடிக்க படப்பிடிப்பு தளத்தின் ஓரமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். சரண்யா மோகனின் இந்த அனுசரணை காரணமாக செல்வபாரதிக்கு பல லட்சங்கள் லாபம். அவரைப் போல் ஒரு நடிகையை பார்ப்பது அரிது என்று புகழ்ந்து தள்ளினார் பிரஸ்மீட்டில்.
 
இந்த பாராட்டுகளுக்கு சரண்யா மோகனும் தகுதியானவர்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்