உயிரோடு திரும்புவோமா என்ற பயத்துடனே படப்பிடிப்பை நடத்தினோம் - இயக்குனர் சார்லஸ் பேட்டி

சனி, 30 ஜூலை 2016 (11:43 IST)
மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்கள் மட்டுமே காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பின்னணியில் படங்கள் எடுப்பது வழக்கம். மற்றவர்கள் பாடல் காட்சியை மட்டும் எடுத்துவிட்டு திரும்புவார்கள்.


 


முதல்முறையாக சின்ன பட்ஜெட் படம் ஒன்றை காஷ்மீரில் இயக்கியிருக்கிறார் சார்லஸ். இவர் நஞ்சுபுரம், அழகு குட்டிச் செல்லம் படங்களை இயக்கியவர். அது குறித்த அவரது பேட்டி. 
 
உங்களின் புதிய படம் குறித்து சொல்லுங்க... 
 
முகிலன் சினிமாஸ் மற்றும் தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் தயாராகியிருக்கு. படத்துக்கு சாலை ன்னு பெயர் வச்சிருக்கோம். நான் கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கேன். 


 
 
யார் யார் நடித்திருக்கிறார்கள்? 
 
எப்படி மனதிற்குள் வந்தாய் படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதுக்கு முன்பு அழகு குட்டிச் செல்லம் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.ஆடுகளம் நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறாங்க. 
 
இந்தப் படத்தை எங்கு படமாக்கினீர்கள்? 
 
சாலை முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பெரும் பனிப்பொழிவு கொட்டும் காலத்தில் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொண்டு முழுப்படத்தையும் எடுத்திருக்கோம். 


 
 
என்ன மாதிரியான சவால்களை படப்பிடிப்பில் எதிர்கொண்டீர்கள்? 
 
இதுவரைக்கும் காஷ்மீரில் இந்திய சினிமாக்கள் பெரும்பாலும் சாதாரண தட்பவெப்பம் இருக்கும் கால நிலைகளில் படமாக்கிவிட்டு திரும்பி விடுவார்கள். அதுவும் ஒரு சில பகுதிகளையோ, காட்சியையோ படமாக்கிவிட்டு வந்துவிடுவார்கள். சாலை படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் கூட படமாக்கி இராத ஆபத்தான கொட்டும் பனிப்பொழிவிற்கிடையே நாற்பத்தைந்து நாட்கள் படமாகி உள்ளது. 
 
பாதுகாப்பு பிரச்சனை இருந்திருக்குமே? 
 
ராணுவ பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு நடுவே மிகவும் சிரமப்பட்டுதான் படமாக்க முடிந்தது. எங்கள் படக்குழுவே உயிரோடு திரும்புவோமா என்ற பெரும் பீதியுடனே அங்கிருந்த ஒவ்வொரு நாளும் கழிந்தது. 
 
ஏன் இந்தளவு ரிஸ்க்...? 
 
வழக்கமாக அனைத்து படங்களும் பனியை அழகு காட்சிக்காகவே பயன்படுத்தி இருப்பர். ஆனால் சாலை படத்தைப் பொருத்தவரை பனி என்பதுதான் கதையின் த்ரில்லிங் பாயிண்ட். படம் பார்க்கும் போது ஒட்டுமொத்த காஷ்மீரின் அழகை அனுபவிக்க முடிந்தாலும் பனி என்ற பெரும் அரக்கன் உங்களை பயப்படுத்திக் கொண்டே இருப்பான். அழகிலும், பயத்திலும் மிரள மிரள ஒரு விஷுவல் ட்ரீட்டே ஆக்கிரமித்திருக்கும். நாங்கள் படப்பிடிப்பு முடிந்து திரும்பியதே எங்கள் ஒவ்வொருவரின் மறுபிறவி என்றே 
சொல்லலாம். 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்