ஜெயலலிதா செய்ததுக்கு மாறான விஷயங்கள் நடப்பதையே கதையாக்கியிருக்கிறேன் - இயக்குனர் சுரேஷ் காமாட்சி பேட்டி

புதன், 1 மார்ச் 2017 (11:07 IST)
விமர்சித்தே பிரபலமானவர்கள் எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் சமீபத்திய வரவு சுரேஷ் காமாட்சி.  விஷால் ஒரு வாரப்பத்திரிகையில் கொடுத்த பேட்டியை வைத்து, விஷால் எப்படி அந்த மாதிரியெல்லாம் பேசலாம் என்று சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கை வெளியிட, அது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவனத்துக்குவர, விஷாலை தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கும்வரை விஷயம் பெரிதானது.

 
கங்காரு, அமைதிப்படை 2 என இவர் தயாரித்த படங்களைவிட இவரது பெயர் இன்டஸ்ட்ரியில் பேமஸ். இப்போது சுரேஷ்  காமாட்சி இயக்குனரும்கூட. படத்துக்கு மிக மிக அவசரம் என்று பெயர் வைத்துள்ளார். அவருடன் ஒரு பேட்டி...
 
தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியது ஏன்?
 
முதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் இருந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் கூட. அமரர்  மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படைக்கு தயாரிப்பாளரானேன். கங்காரு படத்துக்குப் பிறகு புதிய படம் செய்ய கதைகளை யோசித்துக் கொண்டிருந்தபோது நண்பர் ஜெகன் சொன்ன இந்தக் கதை கவனத்தை ஈர்த்தது. அதைத்தான் மிக மிக அவசரம்  எனப் படமாக்கியுள்ளேன்.
 
அப்படி என்ன கதை இது?
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிர் போலீசாரின் பாதுகாப்புக்காக எத்தனையே ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால்  உண்மையில் அதற்கு நேர்மாறான விஷயங்கள்தான் நடக்கின்றன. அதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. மிக உணர்வுப்பூர்வமான கதை. திரையில் வரும்போது அதிர்வுகளை ஏற்படுத்தும்.
 
நடிகர் நடிகைகள்...?
 
இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களில் நடித்த  ஸ்ரீஜா (ஸ்ரீபிரியங்கா) நாயகியாக நடித்துள்ளார். கோரிப்பாளையம் ஹரீஷ், வழக்கு எண் முத்துராமன், ஈ ராமதாஸ், ஆண்டவன்  கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். அண்ணன் சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
படப்பிடிப்பு முடிந்ததா.. ஏதேனும் சுவாரஸ்ய நிகழ்வுகள்?
 
99 சதவீதம் முடிந்துவிட்டது. இந்தப் படம் முழுவதுமே பவானிக்குப் பக்கத்தில் உள்ள கோனேரிப்பட்டி அணையில்தான் நடந்தது.  பாக்யராஜ் சார் பவுனு பவுனுதான் படத்தை இங்குதான் எடுத்திருந்தார். அதன் பிறகு 25 ஆண்டுகள் வேறு படங்களுக்கு அங்கே  அனுமதி தரவில்லை. போராடி நாங்கள் அனுமதி வாங்கி படமாக்கினோம். அந்த அணையும் ஒரு பாத்திரமாகவே வருகிறது  இந்தப் படத்தில். படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்கள் தந்த அபார ஒத்துழைப்பை மறக்க மாட்டேன்.
 
ஒரு இயக்குநராக உங்கள் அனுபவம் எப்படி?
 
எனக்கு திரை இயக்கம் புதிதில்லை. இயக்கம் - சுரேஷ் காமாட்சி என போட்டுக் கொள்வது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். என் திரைப் பயணம் சினிமா இயக்கத்துடன் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
 
முதல் படமே ஹீரோயினை மையப்படுத்தி உருவாக்கியது ஏன்?
 
பெண்களை மையப்படுத்தி என்பதை தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. நம்மை இயக்கும் அச்சே பெண்தான். அவர்கள்  அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட அவர்களுக்கு எதிரான சீண்டல்கள் தொல்லைகள் ஓய்வதில்லை. அதை என் முதல் படத்திலேயே சொல்ல முயற்சித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றுதானே.
 
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பரபரப்பு... நடிகர் சங்க பஞ்சாயத்து என ஒன்றையும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறீர்களே?
 
நானாக வலிந்து போய் எந்தப் பிரச்சினையையும் இழுப்பதில்லை. நான் வளர்ந்த இருக்கிற சூழல் திரைத்துறையில் நடக்கிற  கூத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க விடவில்லை. நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் திரைத்துறையில்  சிஸ்டம் சரியாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முயற்சிக்கிறேன். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது வெறும் பரபரப்பாகத் தெரியும். உள்ளே இருப்பவர்களுக்கு என்னைப் புரியும். அதனால்தான் விஷயமறிந்த அத்தனைப் பேரும் என்னை ஆதரிக்கிறார்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்