சர்வதேச தடகள சம்மேளனத்தின் மீதான நம்பிக்கை குலைந்துள்ளது

சனி, 16 ஜனவரி 2016 (11:41 IST)
வேலியே பயிரை மேய முடியுமா?. இந்தக் கேள்விதான் இப்போது சர்வதேச அளவில் தடகள விளையாட்டு வீரர்களால் முன்வைக்கப்படுகிறது.

காரணம் அந்த அளவுக்கு சர்வதேச தடகள சம்மேளனத்தில் ஊக்க மருந்து பயன்பாட்டை மூடி மறைக்கும் விதத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக சுயாதீன ஆணைக் குழுவொன்றின் விசாரணை அறிக்கை கண்டறிந்துள்ளது.

குறிப்பாக ரஷ்யாவின் சில தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்பாட்டில் ஈடுபட்டனர். அதை மூடி மறைக்க சர்வதேச தடகள சம்மேளனம் பணம் பெற்றுக் கொண்டு ஆதரவு அளித்தது என டிக் பவுண்ட் தலைமையில் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பான ‘வாடா’வால் அமைக்கப்பட்ட அந்தக் குழுவினர் தமது அறிக்கையை நேற்று வெளியிட்டனர்.

ஆனால் சர்வதேசத் தடகளச் சம்மேளனத்தின் தலைவராக இருந்தவரே இதில் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தார் என வாடா அமைத்த சுயாதீனக் குழுவின் உறுப்பினர் ரிச்சர்ட் மெக்லாரன் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பு தோல்வியடைந்துவிட்டது என்பதை சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவர் சபாஸ்டியன் கோ பிபிசியிடம் ஒப்புக் கொண்டார்.

ஆனாலும் இதுபோன்ற ஊழல்கள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டனைச் சேர்ந்தவரான செபாஸ்டியன் கோ கூறுகிறார்.

எனினும் சரவதேச தடகள சம்மேளனத்தின் மீதான நம்பிக்கை குலைந்து போயுள்ளது என முன்னணி பிரிட்டிஷ் தடகள வீரர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்