மீண்டும் பஞ்சாப் அணியில் ராகுலை எடுப்போம்… பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விளக்கம்!

வியாழன், 2 டிசம்பர் 2021 (16:20 IST)
ஏலத்துக்கு சென்றாலும் கே எல் ராகுலை பஞ்சாப் அணிக்கு எடுப்போம் என பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த தொடக்க ஆட்டக்காரராக செயல்பட்டு வருகிறார் கே எல் ராகுல். இப்போது பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் அவரை புதிதாக தொடங்கப்பட்டுள்ள லக்னோ அணிக்காக ஏலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு 20 கோடி ரூபாய் வரை ஏலத்தொகை கொடுக்க லக்னோ அணி தயாராக உள்ளதாம். லக்னோ அணிக்கு கேப்டனாகவும் கே எல் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பஞ்சாப் அணி அவரை தக்கவைக்க விரும்பியதாகவும், ஆனால் அவர்தான் ஏலத்தில் பங்கேற்க போவதாக சொல்லி விலகிக் கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. இதுபற்றி பேசியுள்ள பஞ்சாப் அணி நிர்வாகியான நெஸ் வாடியா ‘பஞ்சாப் அணியில் இருக்கும்போதே அவர் வேறு ஒரு அணியிடம் பேரம் பேசியிருந்தால் அது தவறாகும். அப்படி நடந்திருந்தால் பிசிசிஐ விதிகளின் படி அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ள கருத்து வேறு விதமாக உள்ளது. அதில் ‘கே எல் ராகுல் கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கள் அணியின் முக்கிய வீரராக இருந்துள்ளார். அதனால் அவரை தக்கவைத்துக் கொள்ள விரும்பினோம். ஆனால் அவர்தான் ஏலத்துக்கு செல்ல விரும்பினார். ஒவ்வொரு வீரருக்கு அதற்கான உரிமை உள்ளது. அவரை ஏலத்தில் எடுத்து மறுபடியும் பஞ்சாப் அணியில் இணைய வைப்போம்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்