ராஜஸ்தான் அணிக்கு எதிராக 149 ரன் இலக்குடன் விளையாடிய சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. மேக்குல்லம் (6 ரன்), ரெய்னா (2), சுமித் (44), அஸ்வின் (14), டுபெலிசிஸ் (38) அடுத்தத்தடுத்து வெளியேறினர்.
கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 25 ரன் தேவைப்பட்டது. கூப்பர் வீசிய 19 ஆவது ஓவரில் ஜடேஜா சிக்சர் அடித்தார். அந்த ஓவரில் 13 ரன் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 12 ரன் தேவைப்பட்டது. பவுல்க்னெர் வீசிய அந்த ஓவரில் கேப்டன் தோனி 2 ஆவது பந்தை சிக்சர் அடித்தார். 3 ஆவது பந்தில் 2 ரன்னும், 4ஆவது பந்தில் 3 ரன்னும் எடுத்து வெற்றி பெற வைத்தார்.
வெற்றி குறித்து தோனி கூறியதாவது:–
இந்த ஆடுகளத்தில் அடித்து விளையாட கடினமாக இருந்தது. ஜடேஜா அடித்த சிக்சர் தான் வெற்றிக்கு முக்கியமானதாகும். அஸ்வினிடம் பேட்டிங் திறமை இருக்கிறது. அதை பயன்படுத்தி கொள்ள முன்கூட்டியே களம் இறக்கினோம். அதற்கு நல்ல பலனை தந்தார். இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றார்.