ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை அணியில் இரு தமிழக வீரர்கள்

புதன், 20 ஜூலை 2016 (15:11 IST)
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணிக்காக தமிழகத்தை சேர்ந்த நல்லப்பன் மோகன் ராஜ், தனபால் கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.


 


மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் காந்திரபுரத்தை சேர்ந்தவர். எஸ்டிஏடி மதுரை மற்றும் சென்னை சாய் சென்டர் மாணவர் விடுதியில் தங்கி பயின்ற அவர் இந்திய கால்பந்து அணிக்காக பல்வேறு வயது பிரிவுகளில் விளையாடி உள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். பின்கள ஆட்டக்காரரான இவர் கடந்த இரு சீசன்களிலும் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இந்த அணி 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால் தற்போது சென்னை அணியில் இணைந்துள்ளார்.

தனபால் சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர். சாய் மையத்தில் மோகன் ராஜுக்கு இவர் ஜூனியர் ஆவார். 25 வயதான தனபால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கினார். நடுகள வீரரான இவர் கடந்த சீசனில் புனே அணியில் இடம் பெற்றிருந்தார். தற்போது அவரை சென்னையின் எப்சி அணி நிரந்தர வீரர் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்