ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் எதுவும் திருடு போகவில்லை: நீதிபதி லோதா

ஞாயிறு, 6 செப்டம்பர் 2015 (17:25 IST)
ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் எதுவும் திருடு போகவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிட்டியின் தலைவரும் ஓய்பு பெற்ற நீதிபதியுமான ஆர்.எம்.லோதா கூறியுள்ளார்.
 
இது குறித்து நீதிபதி லோதா கூறுகையில், "ஐபிஎல் சூதாட்ட வழக்கு ஆவணங்கள் திருடு போனதாக, ஊடகங்களில் வெளியான செய்தி கேட்டு உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
 
இது குறித்து, என்னிடம் எந்த கருத்தையும் கேட்காமல் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஐபிஎல் சூதாட்ட வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களும் பத்திரமாக உள்ளன. எந்த ஆவணமும் திருடு போகவில்லை". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
முன்னதாக, ஐபிஎல் சூதாட்ட வழக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில், ஐபிஎல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் திருடு போனதாக தகவல் வெளியாகி இருந்தது. லோதா கமிஷனின் செயலாளர் கோபால் சங்கர நாராயணன் இது குறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி டெல்லி வசந்த் கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். 
 
அந்த புகாரில், தனது அலுவலகம் மற்றும் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து பீரோவை உடைத்து முக்கியமான பேப்பர்களை திருடியதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்