3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி.. முழுமையாக தொடரை வென்றது இந்தியா..!

Siva

வியாழன், 13 பிப்ரவரி 2025 (07:13 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்த தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதனை அடுத்து, அந்த அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
 
நேற்றைய மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நகரில் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 14 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 112 ரன்கள் அடித்தார். அதேபோல், விராட் கோலி 52 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்கள் எடுத்தனர்.
 
இதனை அடுத்து, 357 என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடிய நிலையில், அந்த அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
இந்திய பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப்சிங், ரானா, அக்சர் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். நேற்றைய போட்டியில் சதம் அடித்த சுப்மன் கில், ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்