தோனியிடம் என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்டேன்… ஓய்வுக்குப் பின் வாய் திறக்கும் ஹர்பஜன் சிங்!

சனி, 1 ஜனவரி 2022 (09:52 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளராகப வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதனால்  ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டாலும் ஒரு போட்டியில் கூட அவர் களமிறக்கப்படவில்லை.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் இரு தினங்களுக்கு முன்னர் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். அதில்,’ 23 வருட கால கிரிக்கெட் பயணம் அழகுடன்  நினைவுகூறத்தக்கதாகவும் மாற்றிய ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஓய்வுக்குப் பின் கிரிக்கெட் வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார்.

இந்திய அணியில் இருந்து ஹர்பஜன் சிங் ஓரம் கட்டப்பட்டது 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான். அதனால் அவரின் நிரந்தர இடம் காலியானது. அவ்வப்போது அணிக்குள் வருவதும் பின்னர் நீக்கப்படுவதுமாக இருந்தார். இது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கியது. இதுபற்றி பேசியுள்ள ஹர்பஜன் சிங் ‘நான் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? என்னை ஏன் அணியில் எடுக்கவில்லை? என கேப்டன் தோனியிடம் கேட்டேன். ஆனால் அவரிடம் இருந்து பதில் இல்லை. பதில் சொல்ல விரும்பாத ஒருவரிடம் நான் என்ன கேள்வி கேட்டாலும் பதில் வராது என்று நினைத்தேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்