உங்கள் முன்னிலையில்தானே அணித் தேர்வு செய்தோம்… கோலிக்கு பிசிசிஐ காட்டமான பதில்!

புதன், 7 ஜூலை 2021 (16:13 IST)
காயமடைந்த சுப்மன் கில்லுக்கு பதிலாக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல்லை கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உடலில் உள்காயங்கள் இருப்பதால் அதற்கான சிகிச்சை எடுக்காமல் விளையாடினால் காயம் மேலும் அதிகமாகலாம் என்பதால் அவர் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவருக்குப் பதில் மாற்று வீரராக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரை கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இலங்கையில் இருக்கும் அவர்களை அனுப்ப முடியாது என தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் ‘கோலியின் முன்னணியில்தான் அணித்தேர்வு செய்தோம். இருக்கும் அணியை எவ்வாறு சிறப்பாகக் கையாள வேண்டுமென்றுதான் அணி நிர்வாகம் யோசிக்கவேண்டும். அணியில் ராகுல் இருக்கிறார். ஒருவேளை மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால் ராகுல் பின்னிலை பேட்ஸ்மேனாக செயல்படுவார்’ எனக் கூறி கோலியின் முடிவுக்கு எதிராக பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்