சூப்பர் தொடர் பேட்மின்டன்: இறுதிப்போட்டியில் சாய்னா நேவால்

ஞாயிறு, 21 ஜூன் 2009 (10:49 IST)
இந்தோனேஷியாவில் நடந்து வரும் சூப்பர் தொடர் பேட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.

இந்தோனேஷியன் ஓபன் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் தரநிலையில் 6வது இடம் வகிக்கும் சாய்னா நேவால், சீனாவின் லான்-லூ உடன் மோதினார்.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் 13-13 மற்றும் 23-23 என்ற சமநிலையில் நீடித்தனர். இறுதியில் முதல் செட்டை போராடி சாய்னா வென்றார்.

அடுத்து நடந்த 2வது செட்டிலும் சாய்னாவுக்கு இதே போன்ற சவால் காணப்பட்டது. என்றாலும் அதனையும் கைப்பற்றிய சாய்னா, முடிவில் 25-23, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான சீனாவின் லின் வாங்கை சாய்னா சந்திக்கிறார். இவர் தனது அரைஇறுதியில் 21-19, 21-13 என்ற செட் கணக்கில் சிங்பாங் ஸியை வென்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்