ஒலிம்பிக் மல்யுத்தப் பிரிவில் முதல் முதலாக இந்திய வீராங்கனை

திங்கள், 2 ஏப்ரல் 2012 (12:17 IST)
FILE
பெண்களுக்கான 55 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கீதா, கொரியாவின் ஜி-இன் உம்மை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனை கீதா 5- 0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆசிய மல்யுத்த தகுதி சுற்று போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள அஸ்தானாவில் நடந்தது.

தங்கம் வென்றதனால் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார். இதன் மூலம் மல்யுத்தப்பிரிவில் முதன் முதலாக தகுதி பெற்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிக்ழ்த்தியுள்ளார் கீதா. இவர் ஹரியான மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2004-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் மல்யுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இந்திய வீராங்கனைகள் யாரும் தகுதிபெறவில்லை. இந்த போட்டியில் ஏற்கனவே இந்திய வீரர்கள் அமித்குமார் (55 கிலோ), யோகேஷ்வர் தத் (60 கிலோ) ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்று லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

உலக மற்றும் பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சுஷில்குமார் இன்னும் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை.சீனாவில் வருகிற 27 முதல் 29-ந் தேதி வரையும், பின்லாந்தில் மே 4 முதல் 6-ந் தேதி வரையும் நடைபெறும் தகுதி சுற்று போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி கண்டு தகுதி பெற இன்னும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்