சிறிது காலத்திற்கு முன்புதான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலாமிடத்தில் கோலோச்சிய ஆஸ்ட்ரேலியா தற்போது தோல்வி மேல் தோல்வி தழுவி வருகிறது. குறிப்பாக 1986-87 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்ட்ரேலிய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வி தழுவியுள்ளது.
வெற்றி, தோல்வி கிரிக்கெட்டில் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் தற்போதைய ஆஸ்ட்ரேலிய தோல்விகள் அந்த அணி மீண்டும் 1980களில் இருந்த நிலைக்குச் சென்று விடுமோ என்ற அச்சத்தை ஆஸ்ட்ரேலியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
1982-83ஆம் ஆண்டுகளில் ஆஸ்ட்ரேலிய நட்சத்திரங்களான கிரெக் சாப்பல், டெனிஸ் லில்லி, ராட்னி மார்ஷ் ஆகியோர் ஓய்வு பெற அந்த அணிக்கு ஏற்பட்ட நெருக்கடி பயங்கரமானது.
அந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்ட்ரேலியா 20 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆஸ்ட்ரேலியா என்றால் தொடர்ந்து 15 டெஸ்ட் வெற்றி, 17 டெஸ்ட் வெற்றி என்றுதான் இன்று நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா வெற்றி என்பதையே எட்டிக்கூட பார்க்கமுடியவில்லை.
அப்போதுதான் ஆலன் பார்டர் அணியை சீர்தூக்கி நிறுத்தியதோடு ஒரு நல்ல அணியையும் உருவாக்கித் தந்தார் என்று கூறப்படுவதுண்டு.
ஆனால் அவர் எப்படி தூக்கி நிறுத்தினார் என்றால் நடுவர்களின் உதவியோடு என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.
நாம் அதனை கண்கூடாக கும்ளே தலைமையில் ஆஸ்ட்ரேலியா சென்ற போது பார்த்தோம் சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவர் ரிக்கி பாண்டிங்கைக் கேட்டு அவுட் கொடுத்த கேலிக்கூத்தெல்லாம் நடந்தது.
நாம் தொலைக்காட்சியில் பார்க்காத காலக்கட்டங்களிலும் ஆஸ்ட்ரேலியா நடுவரின் உதவியில்லாமல் வெற்றி பெறுவது மிகவும் அரிதானதாகவே இருந்தது.
1986ஆம் ஆண்டில் இந்தியா கபில்தேவ் தலைமையில் அங்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட
webdunia photo
FILE
தொடரில் விளையாடியது.
அதில் ஆலன் பார்டருக்கு நடுவர்கள் அவுட் தர மாட்டார்கள். அதுவும் ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்ந்த பிறகு பார்டருக்கு அவுட் கொடுத்தால் ஆஸ்ட்ரேலியா தோல்வி உறுதி என்ற நிலையில் ஏகப்பட்ட அவுட்களை நாட் அவுட் என்று ஆஸ்ட்ரேலிய நடுவர்கள் மறுத்தனர். இதனால் இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றிருக்க வேண்டிய தொடர் நடுவர்களின் அராஜகத்தினால் வெற்றி தோல்வியின்றி திரும்பிவர நேரிட்டது.
அதே போல்தான் அனைத்து நாடுகளுக்கும் ஆஸ்ட்ரேலியாவில் நிகழ்ந்தது. பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் என்று அனைத்து சிறந்த அணிகளும் பார்டருக்குக் அவுட் தர மறுத்ததனால் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்த முடியாமல் தவித்தனர். இதனால்தான் ஆலன் பார்டர் பெரிய கேப்டன் என்று ஆஸ்ட்ரேலியா அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.
நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு திட்டம் இருந்திருந்தால் ஆலன் பார்டர் பெரிய கேப்டனாகவோ உலகில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மெனாகவோ ஒருக்காலும் இருந்திருக்க முடியாது என்பது வேறு விஷயம்.
அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா மெல்ல முன்னேறியது. 1987 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு சற்றே வெற்றி, தோல்வி என்று பெரிய வீழ்ச்சிகளை சந்திக்காமல் இருந்தது.
1992 உலகக் கோப்பை போட்டிகளின் போதும் அந்த அணியினால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஆலன் பார்டர் தலைமையில் டேவிட் பூன், மார்க் டெய்லர், ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன் போன்றவர்கள் தலையெடுத்த பிறகு மார்க் டெய்லர் வசம் கேப்டன் பொறுப்பு வருகிறது.
அவர்தான் பார்டர் கொடுத்த அணியை வெற்றிக்கூட்டணியாக மாற்றுகிறார். அணியில் கிளென் மெக்ரா, மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர், இயன் ஹீலி போன்ற தலை சிறந்த வீரர்களூடன் அப்படியே அணியை ஸ்டீவ் வாஹ் கையில் கொடுக்கிறார். அந்த அணியே 1998ஆம் ஆண்டு முதல் தொடர் வெற்றிகளைக் குவித்தது. 1999, 2003, 2007 உலகக் கோப்பைகளை வென்றது.
webdunia photo
FILE
ஆனால் இடையே இந்தியாவின் சௌரவ் கங்கூலி 2001ஆம் ஆண்டு பிளேட்டைத் திருப்பி ஆஸ்ட்ரெலியாவுக்கு ஆப்பு வைத்தார். 2004ஆம் ஆண்டு ஸ்டீவ் வாஹ் ஓய்வு பெறும் தொடரில் அடிலெய்டில் வெற்றி பெற்று ச்ட்னியிலும் வெற்றி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி தொடர் வெற்றி இல்லாமல் ஸ்டீவ் வாஹை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
ரிக்கி பாண்டிங் கையில் அணித் தலைமை பொறுப்பு வந்த பிறகு கிளென் மெக்ரா, வார்ன் இருந்தும் இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரை 2005ஆம் ஆண்டு இழந்தது. ஆனால் அது மிகவும் நெருக்கமான தொடர் இங்கிலாந்து முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது என்று கூற முடியாது. வெற்றி பெற்ற 2 போட்டிகளிலுமே ஆஸ்ட்ரேலியாவும் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற நிலையே இருந்தது.
பிறகு மீண்டும் இங்கிலாந்தை 5-0 என்று ஆஸ்ட்ரேலியா துவம்சம் செய்தது அந்தத் தொடரில் மெக்ரா, ஷேன் வார்ன், லாங்கர், மார்டின் ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால் பாண்டிங்கிற்கு சரிவு மேல் சரிவு ஏற்பட்டது.
தொடர்ந்து ஆஷஸ் தொடரை இங்கிலாந்தில் இழந்தார். இப்போது ஆஸ்ட்ரேலியாவிலும் இழக்கவுள்ளார். இன்றைய அடிலெய்ட் இன்னிங்ஸ் தோல்வி ஆஸ்ட்ரேலிய அணியை 1980களின் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்ற துர்சொப்பனம் அந்த நாட்டு கிரிக்கெட் பண்டிதர்களை துரத்துகிறது.
சமீபத்தில் நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு முறை வந்தவுடன் பாகிஸ்தானிடம் கூட டெஸ்ட் தொடரை ஆஸ்ட்ரேலியாவினால் வெல்ல முடியவில்லை. ஏனெனில் எப்போதும் நடுவர் ஆதரவுடன் இரண்டு முக்கிய பேட்ஸ்மென்களுக்கு அவுட் வாங்கி விடுவார்கள். அதேபோல் தங்களது அணிக்கு சாதகமாக பேட்டிங்கில் இரண்டு தீர்ப்புகளை வாங்கி விடுவார்கள் இதனால் அணிகள் செய்வதறியாது தோல்வி தழுவி வந்ததைத்தான் நாம் இதுவரை ஆஸ்ட்ரேலிய வெற்றியில் பார்த்திருக்கிறோம்.
ஒரு அணி ஒரு தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளையும் ஆஸ்ட்ரேலியாவிடம் இது போன்ற மோசமான தீர்ப்புகளினால் தோல்வி அடைந்தால் அந்த அணியின் அனைத்து வீரர்களின் கிரிக்கெட் வாழ்வும் கேள்விக்குறியாகிவிடுகிறது.
ஸ்டீவ் வாஹிற்கு பிறகு ஆஸ்ட்ரேலியா இது போன்று வெற்றி பெற்றதால்தான் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. நிறைய வீரர்களின் கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியானது. மேற்கிந்திய அணி சரிவு கண்ட அணியாக் இருந்தபோதிலும் அந்த அணிக்கு எதிராகவும் நிறைய தீர்ப்புகள் ஆஸ்ட்ரேலியாவுக்கு சாதகமாக வழங்கப்பட்டதை நாம் காண்பிக்க முடியும்.
லாராவுக்கும் சச்சினுக்கும் இது போன்று அபத்த அவுட்களை கொடுத்து அணியைத் திணறச் செய்துள்ளனர்.
webdunia photo
FILE
ஷேன் வார்னின் பல எல்.பி.டபிள்யூ. அவுட்களை இன்று மீண்டும் ரீ-பிளே போட்டுப் பார்தாலோ அல்லது 3-வது நடுவர் தீர்ப்பிற்கு விட்டாலோ அவர் ஒரு நூற்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை நடுவரின் உதவியுடனேயே பெற்றார் என்பதை நாம் பார்க்க முடியும்.
அவரது லெக்ஸ்பின் பந்து ஒன்று லெக் ஸ்டம்புக்கு நேராக பிட்ச் ஆகி பேடைத் தாக்கும் நியாயமாகப் பார்த்தால் பேட்ஸ்மென் காலைத்தூக்கிப் போட்டு நன்றாக முன்னால் வந்து தடுத்தாடும்போது பந்து பேடைத்தாக்கினால் அவுட் கொடுக்க முடியாது. அது போன்ற அவுட்களை அவர் நிறைய வாங்கியுள்ளார்.
வெங்கட்ராகவன் நடுவராக இருந்த போட்டிகளில் அந்தப் பந்துகளுக்கு அவர் அவுட் கொடுக்காமல் இருந்துள்ளார்.
அதே போல் பேட்-பேடு கேட்ச் அது பலமுறை பந்து மட்டையில் படாமலேயே அவுட் கொடுக்கப்பட்டதும் நடந்துள்ளது.
எனவே ஆஸ்ட்ரேலிய அணியையோ அல்லது ஷேன் வார்னின் பந்து வீச்சு மேதமையையோ மட்டம் தட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. ஒரு மேதை இது போன்று அவுட் வாங்க வேண்டிய அவசியமில்ல்லை. மேலும் ஆஸ்ட்ரேலியா ஒரு அணியாக சிறந்த அணிதான், ஆனால் அந்த அணியின் உத்திதான் உலகில் சிறந்தது, அந்த அணியின் தேர்வு முறைதான் உலகில் சிறந்தது. அந்த நாட்டு பயிற்சியாளர்கள் தான் தலைசிறந்தவர்கள் என்ற மாயை உடைக்கப்படவேண்டிய ஒன்று.
ஒரு அணியின் வெற்றி அந்த அணியின் உண்மையான வெற்றியாக இருக்கவேண்டும், மற்ற அணி வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலங்களை அழிப்பதாக இருப்பது கூடாது.
பொதுவாகவே நடுநிலை நடுவர்கள் முறை வந்தபோதும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, அனைத்து நடுவர்களும் நியூட்ரல்தான் என்று கூறினர்.
அது என்ன வேடிக்கை? அனைத்து நடுவர்களும் நடுநிலையாளர்கள் என்றால் பாகிஸ்தான், இலங்கைக்கு செல்லும் போது அவர்கள் நடுவர்கள் மீது பழி போடவேண்டும்? அதே போல்தான் முதலில் யு.டி.ஆர்.எஸ்.முறை அமல் செய்யப்பட்டபோது "ஆஹா! அருமையான கண்டுபிடிப்பு உடனே இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் தீர்ப்புகள் தங்கள் தோல்விக்கு காரணமாகும்போது அது துல்லியமில்லை, அதில் இது சரியில்லை,அது சரியில்லை என்று சாக்கு போக்குக் கூறத் தொடங்கிவிட்டார்கள்.
எது எப்படியிருந்தாலும் இந்தத் தொடரிலேயே ஆஸ்ட்ரேலியா எப்படியாவது பாண்டிங், ஹஸ்ஸி, கிளார்க் பேட்டிங் மூலம் மீண்டு வந்து பந்து வீச்சில் ஏதாவது அற்புதம் நிகழ்ந்து வெற்றி பெற்றால்தான் உண்டு. இந்தத் தொடரில் தோல்வி தழுவினால் அந்த அணி மீண்டும் 1980-களின் சரிவுக்கு செல்வது உறுதி.
மீண்டும் டெஸ்ட் முதலிடம் செல்ல ஆஸ்ட்ரேலியா புதிய ஆக்ரோஷமான இளம் தலைமையையும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் இளமையான, திறமையான புதிய அணியையும் கட்டமைக்கும் வேலையில் இறங்குவது ஆஸ்ட்ரேலியாவுக்கு நல்லது.