அணியை தூக்கி நிறுத்திய பின் கள வீரர்களின் மன உறுதி!
வெள்ளி, 25 ஜனவரி 2008 (16:48 IST)
இந்திய அணியின் பின் கள வீரர்கள் சமீப காலங்களில் பேட்டிங்கில் காட்டி வரும் மன உறுதி பிரமிக்க வைப்பதாய் உள்ளது.
webdunia photo
FILE
சிட்னியில் சச்சினுடன் இணைந்த ஹர்பஜன், இஷாந்த் ஷர்மா, அதே டெஸ்டில் 2வது இன்னிங்சில் கும்ளே போராடிய விதம் ஆகியவை இந்திய அணியை உணர்வால் ஒன்றுபட்டக் குழுவாக ஒன்று திரட்டியுள்ளது. மிகப்பெரிய அணிகளுக்கு எதிராக இதுபோன்ற மன உறுதி மிக்க ஆட்டங்கள்தான் கைகொடுக்கும்.
பெர்த் டெஸ்டில் ஆர்.பி.சிங், பத்தான் ஆகியோர் ஆடிய மன உறுதி மிக்க ஆட்டம், இன்று அடிலெய்டில் அனில் கும்ளே, ஹர்பஜன், இஷாந்த் ஷர்மா ஆகியோர் காண்பித்த மன உறுதி ஆகியவை இந்திய அணி எதிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு பின் கள வீரர்களை பெறும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது.
இன்று ரிக்கி பாண்டிங் (இன்று மட்டுமல்ல) செய்த மிகப்பெரிய தவறு, ஆட்டம் துவங்கும்போதே ஒரு டீப் கவர் பாயிண்ட், ஒரு லாங் லெக், ஒரு ஸ்கொயர் லெக் என்று ரன் கட்டுப்படுத்தும் ஃபீல்டிங் வியூகத்தை வகுத்தார்.
சச்சின் ஆட்டமிழந்த பிறகு பின் கள வீரர்களுக்கு நெருக்கமான ஃபீல்டிங் அமைப்பை ஏற்படுத்தி நெருக்கடி கொடுக்க தவறிவிட்டார். புல், ஹுக் ஒரு போதும் செய்யாத அனில் கும்ளேவிற்கு பாண்டிங் நிறுத்திய ஃபீல்டிங் செட் அப் தவறானது. ஒரு டீப் ஸ்கொயர், லெக் ஒரு டீப் ஃபைன் லெக் என்று நிறுத்தியுள்ளார். பவுன்சர்களை சரியாக கணித்து அதனை ஆடாமல் விட்டு விட்டார் கும்ளே. அதேபோல் பிராட் ஹாக், சைமன்ட்ஸ் ஆகியோர் வீசும்போதும் நெருக்கமாக வீரர்களை நிறுத்தாமல் சுலபமாக சிங்கிள் எடுக்கும்படியாக நிறுத்தினார். இதனை புரிந்து கொண்ட கும்ளேயும் ஹர்பஜனும் சரியான மனப்பாங்குடன் அடித்து ஆட வேண்டிய பந்தை மட்டும் அடித்து ஆடி 356/7 என்பதிலிருந்து 526 வரை கொண்டு சென்றனர்.
webdunia photo
FILE
ஆஸ்ட்ரேலிய வீரர்கள் மைதானத்தில் களைப்பின் உச்சியில் இருந்தனர். மொத்தம் 6 - 7 கேட்ச்களை கோட்டை விட்டனர். இந்த தினத்தை ரிக்கி பாண்டிங் மறந்துவிட விரும்புவார் என்பது மட்டும் நிச்சயம்.
அடிலெய்டு ஆட்டக்களம் இதுவரை பேட்டிங்கிற்கு சாதகமாக்வே உள்ளது. ஆனால் இறுதியில் ஹர்பஜனின் சில பந்துகள் திரும்பின. கும்ளேயும் படு சிக்கனமாக தாக்குதல் முறையில் பந்து வீசினார். ஓவருக்கு 4 ரன்கள் என்று துவங்கிய ஹெய்டன் மற்றும் ஃபில் ஜாக் அதன் பிறகு சந்தேகத்துடன் விளையாடினர். ஃபில் ஜாக் ஹர்பஜன் வீசிய தூஸ்ராவிற்கு எந்த ஷாட்டையும் ஆடாமல் கால்காப்பில் வாங்கினார். கங்கூலிக்கு அவுட் கொடுத்த நடுவர் இதற்கு இல்லை என்று தலையை பலமாக ஆட்டினார். ஆனால் பந்தை ஆட முயற்சி செய்யாமல் ஸ்டம்பிற்கு நேராக வரும் பந்தை பேடால் தடுத்தால் நியாயமாக அவுட் கொடுக்க வேண்டும். ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை.
ஆஸ்ட்ரேலிய அணியை 400- 425 ரன்கள் என்று சுருட்டி, 100 ரன்கள் வரை இந்தியா முன்னிலை பெற்றிருந்தால் தொடரை சமன் செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.
ஆனால் அடிலெய்ட் டெஸ்ட் வரலாற்றில் 3வது இன்னிங்ஸ் ஆடும் அணிகள் சரிந்துள்ளன. இதனால் எதிர்பாராத முடிவுகளும் ஏற்பட்டுள்ளன. நாளை 3ம் நாள் ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானது. பெர்த் டெஸ்டில் ஆனது போல் ஆஸ்ட்ரேலியா கொத்தாக விக்கெட்டுகளை இழந்தால் தோல்வியின் பயம் அவர்களை பீடிக்கும் என்பது உறுதி.