வெள்ளை வானில் ஜொலித்த கறுப்பு நட்சத்திரம் மகாயா நிடினி
வியாழன், 4 நவம்பர் 2010 (17:01 IST)
webdunia photo
FILE
தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பரின சர்வதேச கிரிக்கெட் வீரரும் அபார, அபாய வேகப்பந்து வீச்சாளருமான மகாயா நிடினி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் கறுப்பரின துவேஷத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட காலத்திற்கு பிறகு 1992ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு 1997-98ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் என்ற வெள்ளை வானில் உதித்த கறுப்பு நட்சத்திரமானார் மகாயா நிடினி.
நிறவெறியால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற ஆப்பிரிக்க கறுப்பரின மக்கள் பெரும்பகுதி வாழும் கேப் மாகாணத்தில் உள்ள எம்டிங்கி என்ற கிராமத்திலிருந்து வெள்ளையர்கள் ஆண்ட கிரிக்கெட் உலகிற்கு வந்தவர் மகாயா நிடினி. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் திறன் தேடல் திட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவர் நிடினி.
அதன் பிறகு டேல் கல்லூரியில் அவர் படித்தார் அந்தக் கல்லூரி கிரிக்கெட்டிற்கு புகழ் பெற்றது.
1998ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இவர் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார். 1999ஆம் ஆண்டு இவரது கிரிக்கெட் வாழ்வு ஏறக்குறைய முடிந்திருக்கும் இவர் மீது பயங்கரமான கற்பழிப்புக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இவர் உறுதியாக நின்று தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து மீண்டு வந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் கறுப்பரினத்தைச் சேர்ந்த ஒருவர் கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டாரென்றால் அது சாதாரண விஷயமல்ல அதிலிருந்து மீள்வது பெரிய உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிகழ்விலிருந்து தப்புவது போல்தான். நிடினி குற்றமற்றவர் என்று நிரூபித்தார். அதன் பிறகு அவர் கிரிக்கெட் வாழ்வு முழுமையாகத் துவங்கியது எனலாம்.
அதன் பிறகு சரியாக 5 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் தென் ஆப்பிரிக்க வீச்சாளர் என்ற பெயர் பெற்றார்.
மேற்கிந்திய தீவுகளில் உதவியில்லாத மட்டை ஆட்டக்களத்தில் தனது அபாரமான இன்கட்டர்களால் மேற்கிந்திய அணிக்கு எதிராக 13 விக்கெட்டுகளை ஒரு டெஸ்ட் போட்டியில் கைப்பற்றியது இவரது மைல்கல் முயற்சியாகும்.
மேற்கிந்திய அணியின் அபார வேகப்பந்து வீச்சு காலக்கட்டம் முடிந்துவிட்ட பிறகு ஏறத்தாழ மால்கம் மார்ஷல் போன்ற அதே பந்து வீச்சு முறையுடன் நிடினி வீசியது மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை நினைவுபடுத்துவதாய் அமைந்தது.
1998ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை இவர் 20 டெஸ்ட் போட்டிகளில் 45 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார்.
ஜனவரி 2002ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2006ஆம் ஆண்டு வரை மகாயா நிடினியின் சிறப்பான பந்து வீச்சு காலக்கட்டம் என்றால் மிகையாகாது.
இந்த 4 ஆண்டுகளில் 51 டெஸ்ட் போட்டிகளில் 243 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் மகாயா நிடினி. இதில் 14 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் 4 முறை ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
ஜனவரி 2007ஆம் ஆண்டு முதல் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய 2009ஆம் ஆண்டு வரை 30 டெஸ்ட் போட்டிகளில் 102 விக்கெட்டுகளை மட்டுமே அவர் கைப்பற்ற முடிந்தது.
மொத்தம் 101 டெஸ்ட் போட்டிகளில் அவர் 390 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா வீச்சாளர்களில் ஷான் போலக்கிற்கு பிறகு அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி 2-வது இடம் பிடித்தார்.
இது சாதாரண விஷயமல்ல. கிராமத்திலிருந்து வந்து வெள்ளை ஆதிக்க தென் ஆப்பிரிக்க சமூகத்தில் பந்து வீச்சாளராகப் பயிற்சி மேற்கொண்டு நாட்டின் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2-வது வீச்சாளர் என்ற பெருமை பெறுவது தென் ஆப்பிரிக்க சமூகத்தில் சாத்தியமில்லாத ஒன்று.
ஒரு நாள் போட்டிகளிலும் 2002ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை இவரது காலம் உச்சத்திலிருந்தது. இவரது சிக்கன விகிதம் 5 ரன்களுக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2005ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2006ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய வீச்சாளர்களாகத் திகழ்ந்த முரளிதரன், கிளென் மெக்ரா, வார்ன், பிளிண்டாஃப் ஆகியோரது பட்டியலில் நிடினி 2-வது இடம் பிடித்திருந்தார்.
தென் ஆப்பிரிக்காவின் பந்துகள் உயரே எழும்பும் ஆட்டக்களங்களில் மகாயா நிடினி அபாயப் பந்து வீச்சாளர். உள்நாட்டு கிரிக்கெடில் இவர் 53 டெஸ்ட் போட்டிகளில் 248 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தம் இவர் ஒரு இன்னின்ஸில் எடுத்த 18 5 விக்கெட்டுகள் சாதனையில் 12 உள்நாட்டில் பெற்றதே. தென் ஆப்பிரிக்க மைதானங்களில் இவர்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் .
ஆஸ்ட்ரேலியாவின் ஸ்டீவ் வாஹ் தலைமை அதிரடி வெற்றிக் கூட்டணி பேட்ஸ்மென்கள் வரிசை இருந்த காலக்கட்டத்தில் நிடினி ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளில் 58 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
குறிப்பாக மேத்யூ ஹைடன் விக்கெட்டுகளை 9 முறையும், மார்கஸ் டிரெஸ்கோதிக் விக்கெட்டை 9 முறையும், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் விக்கெட்டை 8 முறையும் ஸ்ட்ராஸ் விக்கெட்டை 7 முறையும், ரிக்கி பாண்டிங்கை 6 முறையும் சேவாக், இன்சமாம், லஷ்மண் ஆகியோரை 5 முறையும் சச்சின் டெண்டுல்கரை 4 முறையும் வீழ்த்தியுள்ளார்.
பந்து வீச்சு கிரீஸை நன்றாகப் பயன்படுத்தி அவர் பந்து வீசும் கோணம் எவ்வளவு பெரிய பேட்ஸ்மென்களுக்கும் பிரச்சனை ஏற்படுத்தக்கூடியது.
ரிக்கி பாண்டிங்கை 6 முறையும் இது போன்ற ஒரு இன்கட்டர் பந்துகளில் அவர் வீழ்த்தியுள்ளார். வலது கை வீரர்கள் இவரை எதிர்கொள்வது கடினம். மால்கம் மார்ஷல் போலவே இவரையும் அவ்வளவு எளிதில் அடித்து நொறுக்க முடியாதவர். அன்றைய தினம் இவருக்கு ரிதம் கிடைத்து விட்டால் எதிரணியினர் இவரது எழும்பும் பந்துகளை விளையாடுவதில் சிக்கல்தான்.
அதே போல் வேகப்பந்து வீச்சையும் அளவு மற்றும் திசையை நம்பும் இவர் மாற்றங்களில் பெரிதும் ஆர்வம் காட்டாதவர், கடைசி வரை ஸ்லோ பந்துகளை வீசுவதில்லை என்ற சபதமே அவர் எடுத்திருந்தார்.
லட்சியம் நிறைவேறியது ஆனால்...
நாட்டின் முதல் சர்வதேச கறுப்பரின வீரர் ஒருவர் அதிக விக்கெடுகளை வீழ்த்திய வீரராக அனுப்புவதுதான் மகாயா நிடினிக்கும் அவர் சார்ந்த கருப்பரினத்திற்கும், ஆப்பிரிக்கா கண்டம் முழுதிற்கும் செய்யும் நியாயமாக அமைந்திருக்கும்.
ஆனால் அவரை 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லைக் கூட எட்டவிடாமல் அவரை 2009ஆம் ஆண்டே அணியிலிருந்து உட்காரவைத்து அவமானப்படுத்தியது தென் ஆப்பிரிக்க அணித் தேர்வுக்குழு. தென் ஆப்பிரிக்க அணித் தேர்வுக்குழுவில் பல தரப்பினரும் இருந்தாலும் அதன் கொள்கைகளில் பெரிய அளவுக்கு சமூக நீதி தலை தூக்கினாலும் தனிநபர்களின் மனங்களில் இன்னமும் வெள்ளை இன மேட்டிமை இருக்கத்தான் செய்தது.
2009ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர் நிச்சயம் 400 விக்கெட்டுகளை எட்டியிருப்பார்.
ஏதோ ஒரு கிராமத்திலிருந்து வந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டை உயர்வுக்குக் கொண்டு சென்ற ஒரு கறுப்பரின வீரருக்கு இந்த ஒரு வாய்ப்பைக் கூட வழங்க தெனாப்பிரிக்க அணித் தேர்வுக்குழுவுக்கும் அதன் தலைவர் கிரேம் ஸ்மித்திற்கும் மனம் வரவில்லை.
என்னதான் கறுப்பரினத்திலிருந்து ஒருவர் முன்னேறிவந்து சாதனைகள் புரிந்தாலும் அது வெள்ளை இன வீரர்கள் செய்த சாதனைகளை மீறுவதாய் அமைந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்ததாகவே தெரிகிறது.
சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக தென் ஆப்பிரிக்கா செயலாற்றி பதக்கங்களைக் குவித்த போதும், அந்த அணியில் வெள்ளை இனத்தவரே அதிகம் இருந்தனர் என்பதையும் நாம் இதனுடன் சேர்த்து நோக்க வேண்டும். தென் ஆப்பிரிக்க விளையாட்டுத் துறை அமைச்சர் ஒருவரே காமன்வெல்த் விளையாட்டில் தென் ஆப்பிரிக்கச் சாதனை 'வெள்ளையாக உள்ளது' என்று கேலித்தொனியுடன் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
இனி ஒரு கறுப்பரின பந்து வீச்சாளர் தென் ஆப்பிரிக்க அணிக்குள் நுழைந்தாலும் 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடுவது கடினம். எனவே மகாயா நிடினியை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் என்ற பெருமையை அடையச் செய்திருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் 400 விக்கெட்டுகளை எடுத்திருக்க அனுமதித்திருக்க வேண்டும். இதனால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஏதோ விதத்தில் அவருக்கு துரோகம் இழைத்துவிட்டது என்றே தோன்றுகிறது.
நிடினியின் புதிய லட்சியம்
. கிழக்கு லண்டன் பகுதில் மகாயா நிடினி ஏழைக் குழந்தைகளுக்க்காக கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் துவங்கத் திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகள் மெதுவே முன்னேறிவருவதாகக் கூறியுள்ளார் நிடினி.
சிறந்த வசதிகளையுடைய ஒரு அகாடமியாக அது அமையும் என்று நிடினி கூறியுள்ளார்.
பள்ளிகள் கிரிக்கெட், 19 வயது முதல் 24 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அனைத்தையும் இதில் இணைத்து ஒருங்கிணைந்த பயிற்சி மையமாக இதனை உருவாக்க லட்சியம் கொண்டுள்ளார் நிடினி.
கிழக்கு கேப் பெரிதும் கறுப்பரின மக்கள் வாழும் பகுதியாகும், இங்கு நல்ல கிரிக்கெட் பயிற்சி மையங்களோ நல்ல மைதானங்களோ இல்லை. எனவே இப்பகுதியை தேர்வு செய்துள்ளார் நிடினி. குற்றச் செயல்களில் ஈர்க்கப்படும் இளைஞர்களை இந்த கிரிக்கெட் அகாடமி மாற்றி அவர்களின் வாழ்க்கைப்பாதையை மாற்றும் என்ற மிகப்பெரிய உன்னத லட்சியத்துடன் மகாயா நிடினி இந்த அகாடமி வேலைகளை மும்முரமாகத் துவங்கியுள்ளார்.
கறுப்பரின ஏழை மக்களுக்கான கிரிக்கெட் அகாடமியாகத் திகழும் இது என்று கூறியுள்ள நிடினி, இதில் பயிற்சி பெற கட்டணம் கிடையாது, முழுதும் இலவசம் என்ற கனவையும் கொண்டுள்ளார்.
தான் கிரிக்கெட் விளையாடிய ஆரம்பக் காலங்களில் எந்த பயிற்சிக்கும் தான் எந்த தொகையையும் அளித்ததில்லை. எனவே நான் ஏன் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கேட்கும் நிடினி, இது சமூகத்தின் உயர்மட்ட மக்களிடையே உள்ள திறன்களுக்கான வளர்ச்சி மையம் அல்ல. இது முழுக்க முழுக்க திறமை இருந்தும் விளையாட்டில் வாய்ப்பு கிடைக்காத, மறுக்கப்பட்டவர்களுக்கான அகாடமி என்று தெரிவித்துள்ளார் நிடினி.
இந்த அகாடமியை பெரிய அளவில் வளர்த்தெடுக்க அவர் பல சர்வதேச கிரிக்கெட் முன்னணி வீரர்களிடம் பேசி வருகிறார்.
முரளிதரன், சச்சின் டெண்டுல்கர், தோனி, கார்ட்னி வால்ஷ், இயன் பிஷப் உள்ளிட்ட முன்னால், இந்நாள் வீரர்களிடம் தொடர்பு வைத்து இது பற்றி பேசி வருகிறார் நிடினி. இவர்களும் தங்களது 100% ஒத்துழைப்பு உண்டு என்று நம்பிக்கை அளித்திருப்பதாகக் கூறியுள்ளனர் என்று நிடினி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
'நாங்களும் பார்க்கிறோம், தென் ஆப்பிரிக்காவில் கறுப்பரினப் பகுதிகளில் அவ்வளவாக கிரிக்கெட் திறன் இல்லை' என்ற வாசகங்களை இனிமேல் நான் கேட்கக்கூடாது என்று நிடினி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதை வைத்துப் பார்த்தாலே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மேற்கிந்திய அசுரப் பந்து வீச்சாளர்களுக்குப் பிறகு அவர்களை நினைவூட்டும் வகையிலான இந்தப் பந்து வீச்சாளரை தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஒருநாளும் மறக்க முடியாது.