இந்த வருடத்தின் மூன்று மாதங்களை கடந்திருக்கிறது தமிழ் சினிமா. 2013 காலாண்டு திரைப்படங்களின் வெற்றியின் சதவீதம் சென்ற ஆண்டைவிட சிறப்பானதா? இல்லையா? ஆரோக்கியமான திசையில் தமிழ் சினிமா செல்கிறதா? பல்வேறு கேள்விகள்.
பருந்துப் பார்வையில் ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. நல்ல திரைக்கதை அமையாதப் படங்களின் தோல்வி தவிர்க்க முடியாதது. அதேபோன்று வெகுஜனங்கள் நல்ல படங்களைவிட தங்களுக்குப் பிடித்தமான படங்களையே - அது நல்லதாக இருந்தாலும், மோசமானதாக இருந்தாலும் - பார்க்கிறார்கள்.
ஜனவரி முதல் மார்ச் முடிய வெளியான படங்களின் எண்ணிக்கை உத்தேசமாக 44. இதில் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்தப் படங்கள் மூன்று. விஸ்வரூபம், கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா.
விஸ்வரூபம் ஏற்படுத்திய சர்ச்சை பல்வேறு அதிர்வுகளை உண்டாக்கியது இந்த காலாண்டின் முக்கிய நிகழ்வாக அமைந்தது. ஏறக்குறைய 100 கோடியில் தயாரான படம் உலகம் முழுவதும் 150 கோடிகளைத் தாண்டி வசூலித்தது. சிலர் 200 கோடிக்கும் மேல் என்று சொன்னாலும் சரியான புள்ளிவிவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. வெளியிடப்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை பார் என்று சொல்லும் எந்த சினிமாக்காரரும் வியாபார விஷயத்தில் ஹாலிவுட்டைப் போல் திறந்த புத்தகமாக இருக்க விரும்புவதில்லை.
FILE
சென்னையில் விஸ்வரூபம் 12 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக அமைந்திருந்தால் வசூல் மேலும் அதிகரித்திருக்கும் என்பதே உண்மை. பல வருடங்கள் முன்பு எவ்வித சர்ச்சையும் பரபரப்பும் இன்றி வெளியான தசாவதாரம் சென்னையில் பத்து கோடிகள் வசூலித்த நிலையில் விஸ்வரூபம் இவ்வளவு சர்ச்சைக்குப் பிறகும் தசாவதாரத்தைவிட 2 கோடி மட்டுமே அதிகம் வசூலித்தது ஏன் என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
விஸ்வரூபம் படத்தை விற்ற வாங்கிய திரையிட்ட அனைத்துத் தரப்பினரும் லாபம் பார்த்தனர்.
சந்தானமும், ராம.நாராயணனும் இணைந்து தயாரித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஆறு கோடிக்கு மேல் சென்னையில் வசூலித்தது. பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் படம் பம்பர்ஹிட். பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தின் அப்பட்ட தழுவல் என தொpந்தும், பாக்யராஜ் உரிய சட்ட நடவடிக்கை எடுத்தும் சந்தானத்தையும், ராம.நாராயணனையும் எதுவும் செய்ய இயலவில்லை என்பது மோசமான அறிகுறி. பாக்யராஜ் போன்றவர்களுக்கே இந்த நிலை எனில் சாமானியர்களின் கதி? இத்தனைக்கும் இன்று போய் நாளை வா படத்தை தெரியாதவர்கள் யாருமில்லை.
FILE
பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா மார்ச் இறுதியில் வெளியானது. காமெடியை மையமாகக் கொண்ட படம் என்பதால் குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்கில் குவிந்து வருகிறார்கள். முதல் மூன்று தினங்களில் சென்னையில் ஒன்றேகால் கோடியை வசூலித்துள்ளது. அடுத்த வாரம் இது அதிகரிக்கும் என்பதை திரையரங்கில் குவியும் கூட்டம் உணர்த்துகிறது. சென்னையில் மட்டும் இப்படம் எட்டு கோடி அளவுக்கு வசூலாகும் என்பது எதிர்பார்ப்பு. இந்தப் படத்துடன் வெளியான சென்னையில் ஒரு நாள் வெற்றியா தோல்வியா என்பதை இன்னும் ஒருவாரம் போன பின்பே கணிக்க முடியும்.
FILE
பரதேசியின் சென்னை வசூல் திருப்திகரமாக இருந்தாலும் பி,சி சென்டர்களில் படம் அவ்வளவாக போகவில்லை. பரதேசியின் இறுக்கமான சோகப் பின்னணி அதிகமான ரசிகர்களை கவராமல் போனதில் வியப்பில்லை. இந்த காலாண்டின் கவனிக்கத்தக்க படமாக அமைந்தது குமாரவேலின் ஹரிதாஸ்.
FILE
ஆட்டிஸ குறைபாடை என்கவுண்டர் பின்னணியில் அழகாகச் சொன்ன படம். முன்பே சொன்ன மாதிரி நல்ல படமோ, மோசமான படமோ... தங்களை என்டர்டெயின் செய்தால் மட்டுமே வெகுஜனங்கள் ஒரு படத்தை விரும்பிப் பார்க்கிறார்கள். ஹரிதாஸும், பரதேசியும் அதிகம் வசூல் செய்யாமல் போனதற்கும், கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி பெற்றதற்கும் இதுதான் காரணம்.
பிரமாண்ட பட்ஜெட், அதிகபடியான விளம்பரம், மாஸ் ஹீரோ... இவையெல்லாம் இருந்தாலும் திரைக்கதை சரியாக அமையவில்லையெனில் படம் தோல்வியடையும் என்பதை அலெக்ஸ்பாண்டியன் தெளிவாக்கியது. மோசமான ரசனையின் வெளிப்பாடாக அமைந்த படம். ஜெயமோகனின் டாமினேஷனில் வெளிவந்த கடலும் திரைக்கதை சரியில்லாததால்தான் மூழ்கிப் போனது. ஜெயமோகனிடம் கதை வாங்கலாம், வசனம் வாங்கலாம். திரைக்கதை...? மணிரத்னம் செய்த மிகப்பெரிய தவறு.
FILE
திரைப்படம் இயக்குவது என்பது முழுமையாக மனம் ஒன்றி செய்ய வேண்டிய கலை அனுபவம். படத்தைத் தவிர மற்ற அனைத்திலும் கவனம் செலுத்தினால் என்னாகும் என்பதற்கு ஆதிபகவன் சிறந்த உதாரணமாக அமைந்தது. நான் உலகப் படங்கள் பார்க்க மாட்டேன், புத்தகங்கள் எதையும் படிக்க மாட்டேன் என்று பெருமை கொள்கிறவர்களின் நான்காவது ஐந்தாவது படங்களே எப்படி கற்பனை வறட்சிக்கு ஆளாகும் என்பதை ஆதிபகவன் நமக்கு தௌpவுப்படுத்தியது. எண்பதுகளின் அரைகுறை டான் படங்களின் மாடர்ன் வடிவத்துக்கு முப்பதுக்கு மேல் கோடிகளும் இரண்டரை வருடங்களும் செலவழித்தது மன்னிக்க முடியாத குற்றம்.
கொஞ்சம் டாஸ்மாக் காட்சி, அரைகுறை காதல், அடாவடி பிரண்ட்ஸ் என்ற கலவையில் படத்தை எடுப்பது அதிகரித்திருக்கிறது. இதன் மோசமான வடிவமாக வெளிவந்தது ஒன்பதுல குரு. ஹாலிவுட் ஹேங்ஓவர் முதற்கொண்டு பல படங்களின் காப்பி. சமீபத்தில் வெளியான அழகன் அழகி சினிமா பாரடைஸோ, மெலினா போன்ற அற்புத படங்களை தந்த குசாபே டர்னெட்டோரின் ஸ்டார் மேக்கர் படத்தின் தழுவல். சென்னையில் ஒரு நாள் மலையாளம் ட்ராஃபிக்கின் அதிகாரப்பூர்வ ரிமேக், சந்தமாமா மலையாள படம் அயாள் கதை எழுதுகையாணு படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவானது.
இதுதவிர முருகதாஸின் தயாரிப்பில் வந்த வத்திக்குச்சி சுமாரான வசூலை பெற்றிருக்கிறது. பல தடைகளை தாண்டி வெளிவந்த வனயுத்தம் போலீஸ்காரர்களின் பார்வையில் போலீஸ் கதையாக எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. டேவிட் படத்தின் கதை, கதைக்களம், கதைமாந்தர்கள், கதை கூறும்முறை என அனைத்தும் தமிழ் ரசனைக்கு ஒவ்வாமையை தந்தது. டேவிட்டில் சிறுபான்மையினரை தாக்கும் செய்தி அழுத்தமாக முன்வைக்கப்பட்டிருப்பது முக்கியமான அம்சம்.
FILE
ஜனங்கள் காத்திரமான சினிமாவாக இருந்தாலும் அவர்களுக்கு பிடித்தமான முறையில் இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள். தங்களை என்டர்டெயின் செய்யும் முயற்சியில் இயக்குனர்கள் லாஜிக்கை மறந்தாலும், பழைய ஒன் லைன் ஜோக்குகளின் சரமாக படத்தை எடுத்தாலும் அவர்களுக்குப் பிரச்சனையில்லை. நுகர்வு உலகின் புழுக்கத்தில் தவிப்பவர்களுக்கு தேவை சிரிப்பதற்கான சின்ன இடைவெளி. இந்த மனவெளியில் சஞ்சரிக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களின் வெற்றி சதவீதமே இனிவரும் காலங்களில் அதிகமிருக்கும் என்பதையும், அப்படியான படங்களே அதிக அளவில் வெளியாகும் என்பதையும் இந்த காலண்டு சினிமா நமக்கு உணர்த்துகிறது.