மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் மகத்துவம் வாய்ந்தது ஏன் தெரியுமா...?

திங்கள், 13 டிசம்பர் 2021 (17:29 IST)
திரு உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் நடக்கும் ஆருத்ரா தரிசனம் மகத்துவம் வாய்ந்ததாகக் காலம்காலமாகக் கருதப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் இங்கே இருக்கும் மரகத நடராஜர் சிலைதான்.

நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் மிகவும் மென்மையான கல். மத்தளம் முழங்க மரகதம் பொடிபடும் என்று கூறுமளவுக்கு மென் இயல்புடையது. அவ்வளவு மென்மையான மரகதக் கல்லை உளி கொண்டு செதுக்கி 6 அடி உயரத்தில் அற்புதச் சிலையாக வடித்துள்ளனர் நமது முன்னோர்கள்.
 
ஒளி மற்றும் ஒலியால் பாதிக்கப்படாமல் இருக்க ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படுகிறது இந்த மரகத நடராஜர் சிலை. நித்ய அபிஷேகங்கள்கூட, இந்தச் சிலைக்குப் பதிலாக உள்ள உள்ளங்கை அளவு மரகத லிங்கத்திற்குத்தான் நடைபெறும்.
 
ஆண்டில் ஒருநாள், அதுவும் சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனம் அன்று மட்டுமே மரகத நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் முழுவதும் சந்தனக்காப்பு இல்லாமல் மரதகத் திருமேனியுடன் நடராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதைக் காணவே நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு குவிகிறார்கள்.
 
இந்த மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படும். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடராஜரின் மேல் பூசப்பட்ட சந்தனக் காப்பு களையப்பட்டு பக்தர்களின் பார்வைக்காகவும் , வழிபடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்.
 
இதனையொட்டி, வரும் டிசம்பர் 22 - ந் தேதி சனிக்கிழமை காலை சுமார் 09.30 - மனியளவில் சந்தன காப்புகளையப்பட்டு, காலை 11.00 மணியளவில் மரகத நடராஜருக்கு 18 வகையான விசேஷ அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.
 
மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயம் மிகமிகப் பழமையானது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்