முறையற்ற பாலுறவிலிருந்து மீள...

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (17:54 IST)
திருமண வாழ்க்கையில் தம்பதியர் ஒருவருக்கொருவர் பாலுறவுப் புணர்ச்சிக் கொண்டு இன்புற்றிருப்பது என்பது காலங்காலமாக நிகழ்ந்து வருவது.

முன்பெல்லாம் பாலுறவில் ஆண்களிடம் ஏதாவது குறை இருந்தால் பெண்கள் அவற்றை வெளியே சொல்லத் தயங்குவர். இந்த விஷயத்தில் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்றெண்ணிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.

பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதில்லை. ஆண் இல்லை என்றாலும் தனித்தே வாழ முடியும் என்பதை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதன் காரணமாக ஆண்கள் தங்களிடம் உள்ள செக்ஸ் குறைகளை உடனே சரி செய்து கொள்ள வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தாலோ அல்லது குணமாகவில்லை என்றாலோ அதைப்பற்றி வெளியே சொல்ல பெண்கள் தயங்குவதில்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களின் நிலையோ வேறு மாதிரி உள்ளது. ஐ.டி துறை தம்பதியரிடையே பாலுறவு நின்று போனாலோ அல்லது குறைந்தாலோ, தாங்கள் செக்ஸ் -க்கு முழுமையாகத் தயார்; தங்களது துணைக்குத் தான் செக்ஸ் குறைபாடு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.

பாலுறவுப் பிரச்சினையைப் பொருத்தவரை குறைபாடு எங்கு உள்ளது என்பதை தம்பதியர் அறிந்து கொண்டால் பிரச்சினைகள் உண்டாகாது.

ஆண்களுக்கு வரும் குறைகள்:

விரைப்புத் தன்மை இன்மை.
மிகக் குறுகிய நேர விரைப்புத் தன்மை.
ஆர்வமில்லாத உறவு.
வக்கிர உறவுகள்.
நீண்ட நேர விரைப்புத் தன்மை.
திருப்தி கிடைக்காத நிலைமை.
நினைத்த நேரத்தில் உறவு கொள்ள முடியாமை.
சிறிய உறுப்பு என்ற கவலை.

பெண்களுக்கான பிரச்சினைகள்:

உறவுக்கு செக்ஸ் உறுப்புகள் தயாராகாமை.
திருப்தியடையாமை.
உச்சக்கட்டம் எட்டாமல் இருப்பது.
உறவில் வலி.
உறுப்புகள் மீது அவமரியாதை.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மனதில் ஏற்படும் குழப்பங்களே காரணமாகின்றன. மிகச் சிலருக்கே உடற்கூறுகள் காரணமாகின்றன.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவற்றுக்கு முழுமையான தீர்வு உள்ளது. என்றாலும் தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி தங்களிடம் உள்ள குறைகளைப் போக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு ஏற்படும்.

ஐ.டி. தம்பதியரைப் பொருத்தவரை நேரம் கிடைக்கும் போது உறவு வைத்துக் கொள்வதில் இருவருக்குமே நாட்டம் இருத்தல் அவசியம். அல்லது இருவரில் யாருக்குக் குறை இருந்தாலும் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி குறையைக் களைய முன்வர வேண்டும்.

குறைகளை அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி ஆறுதல் தேட முயற்சிப்பதோ, சுட்டிக்காட்டுவதோ கூடாது.

ஐ.டி. துறையினர் அதிக நேரம் அலுவலகங்களில் இருப்பதால், ஆண்-பெண் இருவருமே வீட்டில் உள்ள துணையை விடுத்து, பல காரணங்களால் அலுவலக நண்பர்களுடன் நெருங்கிப் பழக நேரிடுகிறது. அதுவே சில நேரங்களில் பாலுறவை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்குப் போய் விடுகிறது.

வேறு சிலர் `குழு பாலுறவு' (Group sex) எனப்பதும் வலையில் விழுந்து விடுகிறார்கள். ஐ.டி. நிறுவனங்களில் இதுபோன்றதொரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற முறையற்ற பாலுறவால் குடும்ப வாழ்க்கை (இருதரப்பிலும்) பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது.

இப்படி ஏதாவதொரு சிக்கலில் மாட்டிக் கொள்வதால் குற்ற உணர்ச்சி ஏற்படும். பால்வினை நோய்களும் சில நேரங்களில் ஏற்படலாம்.

இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தப்ப வேண்டுமானால், வாழ்க்கைத்துணையுடன் செக்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் விட்டுக் கொடுத்துப் போவது சிறந்தது. வேலையைப் பகிர்ந்து கொள்ளலாம்.

வேலையைப் போன்றே குடும்பத்திற்கும் போதிய அளவு நேரம் ஒதுக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களுக்கும் போதிய மதிப்பளிக்க வேண்டும்.

தம்பதியரோ அல்லது திருமணமாகாதவர்களோ முறையற்ற உறவுகளைத் தவிர்க்க வேண்டும். மன பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம்.

வீடு, குடும்பம் என்பதையும் அவ்வப்போது நினைத்து, உரிய நேரத்தை ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்கள். பிரச்சினைகள் தீர்க்கப்படுவது நிச்சயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்