திருமணத்தை நிறுத்திய சிறுமிக்கு விருது

செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:25 IST)
50 வயது ஆணுடன் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்திய 14 வயது பெண்ணுக்கு இந்த ஆண்டுக்கான வீரதீர செயல்களுக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

ராஜஸ்தானில் 8 வயதானால் போதும் பெண்ணோ, பையனோ உடனே திருமணத்தை முடித்துவிடுவார்கள். இதுதான் அவர்களது வழக்கமாகவே இருந்தது. திருமணம் என்றால் என்ன என்றே தெரியாத வயதில் திருமணம் செய்துவைக்கும் முறையை எதிர்த்து நின்ற இந்த 14 வயது சிறுமியின் பெயர் அன்சூ கன்வார்.

கடந்த ஆண்டு அன்சூ கன்வாருக்கு 50 வயதான ஊனமுற்ற நபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கு அன்சூ மறுப்பு தெரிவித்தார். அந்த ஊர் பெரியவர்கள்(?) இந்த திருமணத்திற்கு வற்புறுத்த அவரது அப்பாவும் அதனை மீற முடியவில்லை.

அன்சூ திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும், அன்சூவின் குடும்பத்தான் ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கவும் ஊர் பெரியவர்கள்(?) உத்தரவிட்டனர்.

இதனை அடுத்து அரசு அதிகாரிகள் மூலம் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நியாயம் தேடினாள் அன்சூ. அன்சூவின் இந்த செயலால், அவரது கிராமத்தில் நடக்க இருந்த 8 குழந்தைகளின் திருமணங்களும் நிறுத்தப்பட்டன.

இதற்காக அவளுக்கு ராஜஸ்தான் அரசு விருது வழங்கி கெளரவித்தது. இப்போது தேசிய விருதுக்கு அவளது பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் அன்சூவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விருது வழங்குவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்