குழந்தைகள் உங்களது அடிமைகள் அல்ல

புதன், 22 ஏப்ரல் 2009 (13:54 IST)
எல்லோருக்கும் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய செல்வம் அவர்களது குழந்தைகள்தான். ஆனால் பலரும் அந்த செல்வத்தை வைத்துக் கொண்டு வாழத் தெரியாமல் இருக்கின்றனர்.

குழந்தைகளின் விருப்பப்படி அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களை தங்களது கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்வது ஒரு வகைப் பெற்றோர். இதில் குழந்தையின் விருப்பமும் நிறைவேறிவிடுகிறது. பெற்றவர்களும் நிம்மதியாக இருக்கின்றனர்.

ஆனால் ஒரு சில பெற்றவர்கள், எல்லாமே தங்கள் இஷ்டப்படித்தான் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். தங்களது விருப்பத்தை குழந்தையின் மீது திணிக்கின்றனர். தங்களது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

ஆடை, அலங்காரம், பள்ளிக் கல்வி முறை, கூடுதல் வகுப்புகள் என அனைத்துமே பெற்றவர்களது விருப்பத்தின்படி இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

தாங்கள் செய்ய முடியாததை, படிக்காததை எல்லாம் பிள்ளைகள் படித்துவிட வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதையெல்லாம் விட, இந்த வசதி எல்லாம் எங்களுக்கு கிடைக்கல, நீயாவது இதை பயன்படுத்தி படி என்று அறிவுரை வழங்குவார்கள்.

இதில் என்ன குற்றம் என்று கேட்காதீர்கள், உங்களைப் போன்றே உங்களது குழந்தைகளுக்கும் ஆசைகள், விருப்பங்கள் இருக்கும். அவர்களுக்குள் ஒரு தனித் திறமை இருக்கும். அதனை வெளிப்படுத்தும் வகையிலான படிப்புகளைத்தான் அவர்கள் நாடுவார்கள்.

அதைவிடுத்து அவர்களுக்கு விருப்பமில்லாத வகுப்பில் சேர்த்துவிட்டு, அவர்களைப் படி படி என்றால் எப்படி அவர்கள் படிப்பார்கள்.

செலவு செய்யவும், சேமித்து வைக்கவும் கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு என்று செலவு செய்ய காசு கொடுங்கள். அதனை தேவையான பொருட்களை வாங்கவும், மீதமுள்ள பணத்தை சேமித்து வைக்கவும் பழக்கப்படுத்துங்கள்.

சின்னப்பசங்க அவங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாமே வாங்கிக் கொடுக்கும்போது அவர்களுக்கு எதற்கு காசு என்று கேட்காதீர்கள். அப்படி செய்யும்போதுதான் அவர்கள் வீட்டிலேயே காசை திருடும் பழக்கம் ஏற்படுகிறது.

நமது குழந்தை செல்வங்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டிய கடமை பெற்றோருக்குத்தான் உள்ளது. ஆனால் அதனை சரியாக செய்ய வேண்டும்.

குழந்தை என்பது கையில் இருக்கும் பறவை போன்றது, அழுத்திப் பிடித்தால் இறந்து போகும், பிடிக்காமல் விட்டுவிட்டால் பறந்து போகும், எனவே இதமாக தடவிக் கொடுத்து பதமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்