குழந்தைகளும் இன்டர்நெட்டும்

ரேகா, ஸ்ரீதர் இருவரும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் 12 வயது மகன் திவாகர் கம்ப்யூட்டரில் ஆர்வம் காட்டியது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. ரூ. 8,000 தொலைபேசி கட்டணம் வந்த பிறகுதான் திவாகர் பல மணி நேரம் இன்டர்நெட்டில் வலம் வருவது அவர்களுக்குத் தெரிந்தது. மேலும் ஆராய்ந்ததில் அவன் செக்ஸ் வெப்சைட்களைப் பார்ப்பது தெரியவந்தது. இருவருக்கும் அதிர்ச்சி!

குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது.

குழந்தைகள் இன்டர்நெட்டை சரியான முறையில் உபயோகிக்க பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது :
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி கேட்டுக்கொள்வதே இல்லை. இதனால் குழந்தைகள் வழி தவறும் போது பெற்றோருக்குத் தெரியாமலே போகிறது.

குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது :
குழந்தைகள் மனதில் எழும் சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்க்கவும், குழந்தைகளின் விருப்பங்களை அறியவும் அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லவும் இது உதவும்.

கம்ப்யூட்டரை பொதுவான இடத்தில் வைப்பது :
கம்ப்யூட்டரை குழந்தைகளின் அறையில் வைப்பதை தவிர்ப்பது நல்லது. தனிமையில் இருக்கும்போது தவறானவற்றை பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.

கம்ப்யூட்டரில் செலவிடும் நேரத்தை விதிப்பது :
இவ்வளவு நேரம் தான் கம்ப்யூட்டரில் குழந்தைகள் செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருக்க `பாஸ்வேர்ட்' உதவும்.

இன்டர்நெட் உபயோகத்தை கண்காணிப்பது :
வீட்டில் இன்டர்நெட்டுக்கு தடை விதித்தால் குழந்தைகள் `சைபர் கஃபே'களுக்குச் செல்லலாம். அங்கு பெற்றோர்கள் அவர்களை கண்காணிக்க முடியாமல் போகும். இதனால் தடுப்பதை விட கண்காணிப்பது சிறந்தது.

குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரியவைப்பது அவசியம். அதிகமான கண்டிப்பு தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்