தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது - குஷ்பு ஆவேசம்!

திங்கள், 7 ஏப்ரல் 2014 (12:55 IST)
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:–
Actress Kushboo election campaign
நேற்று மாலை திருச்சியில் நத்தர்ஷா பள்ளிவாசல் அருகேயும், உறையூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் பிரச்சாரம் செய்து திமுக வேட்பாளர் மு.அன்பழகனுக்கு ஆதரவு திரட்டினார்.
 
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா ஒவ்வொரு இடத்தில் பேசும் போதும், திமுக இந்த தேர்தலில் 4–வது இடத்துக்கு சென்று விடும் என்றும், திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என்றும் கூறுகிறார். திமுகவில் பயம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களையும், சிறுபான்மையின மக்களையும் முதல் இடத்துக்கு கொண்டு வருவதற்கு பாடுபட்டு வரும் கட்சி திமுக மட்டுமே.

தலைவர் கலைஞர், விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்தார். அ.திமுக ஆட்சியில் 3 வருடத்தில் 12 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை அதிமுகவினர், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததாலும், வயதாகிவிட்டதாலும் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள்.
Kushboo - DMK
சோறு போடும் விவசாயி தற்கொலை செய்து கொள்வதை விட கொடுமை வேறு எதுவும் கிடையாது. ஜெயலலிதா ஒவ்வொரு இடத்துக்கும் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று வருகிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 40 ஹெலிபேடு தளங்கள் கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஹெலிபேடுக்காக தளம் அமைக்கப்பட்ட இடம் வேறு எதற்கும் பயன்படாது.
 
அதிமுக ஆட்சிக்கு வந்ததும், 3 மாதத்தில் மின்வெட்டை சரி செய்வதாக சொன்னார்கள். ஆனால் செய்தார்களா? தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு அதிகரித்துவிட்டது. ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. திமுக வேட்பாளர் மு.அன்பழகன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகளை போட்டார்கள். ஆனால் அவர் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறார். இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் அன்பழகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்