காதலர் தின பரிசு வாங்க ஆடு திருடிய காதலன்! – விழுப்புரத்தில் வினோதம்!

திங்கள், 13 பிப்ரவரி 2023 (12:27 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் காதலர் தினத்திற்கு பரிசு வாங்குவதற்காக இளைஞர் ஒருவர் ஆடுகளை திருடிய சம்பவம் நடந்துள்ளது.

நாளை (பிப்ரவரி) காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக காதலிப்பவர்கள் தங்கள் காதலன்/காதலிக்கு பரிசுகள் வாங்கி தருவது வழக்கம். விழுப்புரத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் அரவிந்த்குமார் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலர் தினத்திற்கு அந்த பெண்ணுக்கு பரிசு வாங்கி கொடுக்க நினைத்துள்ளார். அதற்கு அவரிடம் பணம் இல்லை. அதனால் தனது நண்பன் மோகனுடன் சேர்ந்து ஆடு திருடி அதை விற்று பரிசு வாங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி கண்டாச்சிபுரம் மலையரசன் குப்பம் கிராமத்தை சேர்ந்த ரேணுகா என்பவரின் ஆட்டுப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர்கள் ஆடு ஒன்றை திருடிக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரேணுகா “திருடன் திருடன்” என கத்தவே அக்கம்பக்கத்தினர் விரட்டி சென்று இளைஞர்கள் இருவரையும் பிடித்துள்ளனர். பின்னர் அவர்கள் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். காதலிக்கு பரிசு தர நினைத்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் இளைஞரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்